சஞ்சிதா ஷெட்டியை தேவதையாக கவனித்த திண்டுக்கல் லியோனியின் குடும்பம்
எஸ்தெல் எண்டெர்டெயினர் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’. இதில் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது:-
“நான் படிக்கும் காலத்திலிருந்தே லியோனி சாரின் ரசிகன் நான். அவரது மேடைப்பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும். லியோனி சார் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. இன்று மேடையில், அவர் மகன் பேசும்போது ஆனந்தத்தோடு அவர் பார்த்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமையாக இருந்தது. எல்லா தந்தைக்கும் இந்த அன்பு இருக்கும். இயக்குநர் விஜயகுமார் பேச்சிலேயே அவர் சிறந்த படைப்பைத் தந்திருப்பார் என்பது தெரிகிறது. மிகக் கூர்மையாக, நகைச்சுவையுடன் பேசினார். படமும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். நாயகன் சிவா அவரிடம் பேச்சில் தெரியும் பணிவு, அவரின் பெற்றோரிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைய வேண்டும். படத்தில் எல்லோரும் கடினமாக உழைத்திருப்பது தெரிகிறது. லியோனி சார் யார் மனதையும் காயப்படுத்தாதவர். அவர் மனது போலவே படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்”
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது :-
“கே எஸ் ரவிக்குமாரின் ரசிகை நான். நீங்கள் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. நாயகன் சிவா ஃபேமிலி எப்போதும் செட்டில் இருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக்கொண்டார்கள். ஷூட்டிங் அனுபவம் அப்படிதான் இருந்தது. லியோனி சார் பழக மிக இனிமையானவர். படத்தில் ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப்பெண்ணாகவும் மற்றும் நான்கு பருவங்களிலும் நடித்துள்ளேன். என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஒரு சிம்பிள் லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.
படத்தின் இயக்குநர் விஜயகுமார் பேசியதாவது:-
இயக்குநர் சீனு ராமசாமியின் உடன் பிறந்த தம்பி நான். அவருடன் 4 படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். கோவிட் காலத்தில் இந்தக்கதையை கடும் இன்னல்களுக்கிடையில் உருவாக்கினேன். மாமனிதன் படத்தில் சிவா ஒரு கதாப்பாத்திரம் செய்தார். அப்போது அண்ணன் இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹீரோவாக்கினேன். இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன். அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார். அவர் தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் ஒரு கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் சார் என்றார். அவருக்கு நன்றி. அவருக்கு இந்தப்படம் ஒரு திருப்பமாக இருக்கும். பிரபு சாலமன் சார் பிரபு சாலமானகவே நடித்துள்ளார் அவர் அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். அவருக்கு என் நன்றிகள். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார் அவருக்கு என் பெரிய நன்றி” என்றார்.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியபோது, “சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்த என் தாய், தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன். சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது. எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி. என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார்”என்றார்.
திண்டுக்கல் லியோனி பேசியதாவது:-
“கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்த விஜய்சேதுபதிக்கு எனது பெரிய நன்றி. என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான். பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்”