பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடிய மாணவர்கள்
சென்னையில் நாளை நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கிடையே செஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், பள்ளி அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதன் வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடினார்கள். அதிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் அரசு ஏற்பாடு செய்தது. இப்போட்டிகள் 1-5 வகுப்புகள், 6-8 வகுப்புகள், 9-10 வகுப்புகள், 11-12 வகுப்புகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 100 மாணவ-மாணவியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூரு வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் விமானத்தின் உள்ளே சிறப்பு செஸ் போட்டியும் விளையாடினார்கள். இதன்படி செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி 100 மாணவ-மாணவிகள் சென்னையில் இருந்து பெங்களூரு வரை சென்று திரும்பும் வகையில் இன்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சிறப்பு விமானத்தினை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இன்று மதியம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.