திரை விமர்சனம்

 ‘எமகாதகி’ – விமர்சனம்

கூட்டுக் குடும்பத்தில் ஹேப்பி அண்ணாச்சியென வாழும் நாயகி ரூபா கொடவையூருக்கு ஒருநாள் அப்பாவின் கோபம் எமனாய் வந்து நிற்கிறது. அப்பா திட்டியதால் தற்கொலை செய்துகொள்ள அதிர்ந்துபோகிறார்கள் குடும்பத்தினர். விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று நினைக்கும்  குடும்பத்தார், ரூபா ஆஸ்துமா பிரச்சனையால் இறந்தவிட்டதாக கதை கட்டுகிறார்கள்.

இறுதிச் சடங்கில் பிணமாக இருந்த ரூபா திடீரென எழுந்து உட்கார, உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொள்கிறது! சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்பவரை அழைத்து வந்து, என்னாச்சு என்று பார்க்க சொல்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்த சடலத்தை பார்த்துவிட்டு, இந்த பெண் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறார், என்று சொல்ல அடுத்த அதிர்ச்சி. ரூபா பிணமா? பேயா? பிசாசா? எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்கிறது தொடரும் காட்சிகள். அதன்படி, இறந்த நாயகி ரூபா என்ன சொல்ல வருகிறார்?, என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்வதே ‘எமகாதகி’.

கதையே செம சுவாரஸ்மா இருக்குல்ல? இது உண்மையிலே நடந்த சம்பவம்னா நினைச்சு பாருங்களேன்… யெஸ்! உண்மை சம்பவத்தைதான் படமாக்கியுள்ளார் இயக்குநர்.

டிக்கரிங் பட்டியெல்லாம் தட்டி ஓவர் மேக்கப்பில் மினுமினுக்கும் வழக்கமான ஹீரோயின் இல்லை நாயகி ரூபா கொடவையூர். முகம், நடிப்பு எல்லாமே இயல்பாகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளது ரூபாவுக்கு. சடலமாக கிடப்பது, காதலனிடம் காதலை வெளிப்படுத்தும் விதம் என ரூபா படம் பார்ப்பவர்களின் மனசுக்குள் நங்கூரமிடுகிறார்!

அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரூபாவின் காதலனாக நடித்திருக்கும் நரேந்திர பிரசாத், பார்த்த உடனே பிடித்துப் போகும் கேமராவுக்கான முகமாக இருக்கிறார். காதல் காட்சிகளில் அவரது திரை இருப்பு மற்றும் நாயகி உடனான கெமிஸ்ட்ரி திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அப்பாவாக நடித்திருக்கும் ராஜு ராஜப்பன், அண்ணனாக நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமி, அண்ணியாக நடித்திருக்கும் ஹரிதா ஆகியோருடன் ஊர் மக்களாக நடித்திருப்பவர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

ஜெசின் ஜார்ஜ், இசையில் காதல் பாடல் மனதை மயக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், குறைந்த ஒளியை பயன்படுத்தி கிராமத்து பழங்காலத்து வீட்டினுள் நம்மையும் பயணிக்க வைக்கிறார்.

சாதி பாகுபாட்டின் வன்மத்தையும், அது மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் எஸ்.ராஜேந்திரனின் வசனங்கள் மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், பார்வையாளர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் விதத்தில் கூர்மையாக இருக்கிறது.

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், தான் பார்த்த ஒரு உண்மை சம்பவதை திரை மொழியில் மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இதுபோல் நடந்த சில சம்பவங்கள் பற்றி கதாபாத்திரங்களை பேச வைத்து, அந்த சம்பவங்களுடன் பார்வையாளர்களை பயணிக்க வைத்திருப்பவர், வெவ்வேறு விசயங்கள் மீது பார்வையாளர்களின் கவனம் திருப்பும் விதமாக காட்சிகளை வடிவமைத்து இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை சொல்லி படத்தை முடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

‘எமகாதகி’ எல்லோர் மனதிலும் இருப்பாள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE