மத அரசியலின் ஆபத்தை உணர்த்தும் ‘எம்புரான்’ – விமர்சனம்
கேரளாவில் அக்கிரம அரசியல் செய்யும் விவேக் ஓபராயை போட்டுத்தள்ளி, டொவினோ தாமஸிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, மோகன்லால் காணாமல் போவதே ‘லூசிபர்’ முதல் பாகம்.
நல்லாட்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டொவினோ தாமஸ் ஊழலில் திளைக்கிறார். ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பிக்க, மதவாதக் கட்சியோடு கைகோர்த்து, தன் சொந்தக் கட்சியிலிருந்தே விலகி, தனியாகக் கட்சி தொடங்குகிறார்.
இது கேரளத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எல்லோரும் அஞ்சுகிறார்கள். மறுபுறம், சர்வதேச அளவில் போதைக் கும்பல்களால் உலகளவிலும் பிரச்னைகள் எழ, இரண்டையும் சரி செய்ய, மோகன் லால் களமிறங்குவதே ‘எல் 2: எம்புரான்’.
டெம்ப்ளேட் வில்லனாக மாறியிருக்க வேண்டிய கதாபாத்திரத்தைச் சின்ன சின்ன உடல்மொழியால், தனித்து நிற்க வைத்திருக்கிறார் டொவினோ தாமஸ்.
அரசியல் அவதார காட்சியில் தன் அனுபவத்தைப் பதிந்து, கவர்கிறார் மஞ்சு வாரியர். தொடக்கத்தில் வெறுப்பைச் சம்பாதிக்கும் அபிமன்யு சிங், இரண்டாம் பாதியில் வழக்கமான கத்தல்களோடு நின்றுவிடுகிறார்.
ப்ரித்விராஜின் ஆக்ஷன் பங்களிப்பில் குறையில்லை. சுகந்த் கோயல், இந்திரஜித் சுகுமாரன், ஃபாசில், சுராஜ் வெஞ்ஞாரமூடு, கிஷோர், பைஜு சந்தோஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்கா, லண்டன், எகிப்து, வட இந்தியா, கேரளா என மாறிக்கொண்டே இருக்கும் நில அமைப்புகளுக்குத் தேவையான ஒளியமைப்பைத் தந்ததோடு, ஆக்ஷன், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பிரமாண்டத்தை ‘Anamorphic’ வடிவத்தில் திரைக்குக் கடத்தி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ்.
தன் பங்கிற்கு ஆக்ஷனின் காட்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன். ஆனாலும், குமுளி செக்போஸ்ட்டைத் தாண்டி கம்பம் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நீளும் சில ஆக்ஷன் காட்சிகளை இழுத்துக்கட்டத் தவறுவதால், ‘வேகமெடுக்கு சேட்டா’ என கமென்ட் அடிக்கத் தோன்றுகிறது.
பிரமாண்ட காட்சிகள் மட்டுமல்லாது, எல்லா காட்சிகளையும் தன் அட்டகாசமான பின்னணி இசையால் மெருகேற்றியிருக்கிறார் தீபக் தேவ். ஸ்டன்ட் சில்வாவின் அட்டகாசமான ஆக்ஷன் வடிவமைப்பு, படத்திற்கு முதுகெலும்பு.
2002-ம் ஆண்டு நடப்பதாகக் காட்டப்படும் மதக் கலவரம், அதனால் வன்முறைக்கும் படுகொலைக்கும் ஆளாகும் இஸ்லாமியர்கள், அதை அரங்கேற்றியவர்கள் அரசியல் தலைவர்களாக மாறி நிற்பது, அவர்கள் கேரளாவைக் குறிவைப்பது என நிதானமாகவும் அழுத்தமாகவும் கதையின் ஆன்மாவைப் பேசத் தொடங்குகிறது திரைக்கதை.
இடையிடையே சர்வதேச போதைப் பொருள் அரசியலையும் பேசுகிறது. இரண்டும் எப்போது ஸ்டீபன் நெடும்பள்ளி வருவார் என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்து, அதற்கேற்ற நேரத்தில் மோகன்லாலின் அறிமுகம் வருகிறது.
கொள்கை அரசியலையும் கேரளத்தின் கள அரசியலையும், வீரியமாகப் பேசுவதோடு, மத அரசியலின் அபாயத்தையும் ஆழமாக விவாதிக்கிறது படம்.
மோகன்லாலில் இருப்பு, அவரின் சில மைண்ட் கேம் காட்சிகள், லாஜிக் ஓட்டைகளைச் சில சுவாரஸ்யங்களால் அடைத்தவிதம் போன்றவற்றால் மட்டுமே முதற்பாதி தப்பிக்கிறது.
மோகன்லாலின் ‘வாடா’ மொமண்ட், அவரின் மேனரிஸம், லூசிபர் ரெபரென்ஸ், க்ளைமாக்ஸ் பின்கதை சர்ப்ரைஸ் எனப் பல மொமன்ட்கள் க்ளிக் ஆகி ஆறுதல் தருகின்றன.
மொத்தத்தில் மலையாள சினிமாவுக்கு புது ஸ்டைலை அறிமுகப்படுத்தும் ‘எம்புரான்’ இது.