சினிமா செய்திகள்

“எங்களை பார்த்தா எப்படி தெரியுது?” : மாரிசெல்வராஜுக்கு நடிகை ஆராத்யாவின் மனம் திறந்த கேள்வி!

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்  ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகை ஆராத்யா பேசிய பேச்சுதான் தீயாய் பற்றியுள்ளது. அப்படி என்ன பேசினார்? கேளுங்க…

“நான் ஒரு படத்தில் நன்றாக நடிக்கிறேன் என நீங்கள் கருதினால், அதற்குக் காரணம் என் நடிப்பு 50 சதவீதம்தான்; மீதமுள்ள 50 சதவீதம் இந்தப் படத்துக்காக உழைக்கும் அனைத்து டெக்னீஷியன்களும்தான்.

ஆனந்தராஜ் சார் கூட நடிப்பது எனக்கு ஒரு பெரிய பாக்கியம். இந்தப் படத்தில் நான் ஆங்லோ-இந்தியன் பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். அவர்கள் நினைத்திருந்தால், ஹிந்தி அல்லது மலையாளம் போன்ற வேறு மொழிப் பெண்களை நடிக்க வைத்திருக்கலாம்.

ஆனால், நான் தமிழ்ப்பெண் முகச்சாயல் கொண்டிருந்தாலும், என்னை நம்பி அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள். கதாநாயகி என்றாலே 25 வயதுக்குள் இருக்க வேண்டும், திருமணமாகியிருக்கக்கூடாது, ஆண் நண்பர்களும் இருக்கக்கூடாது – இதெல்லாம் ஹீரோயின்களுக்கு வைத்திருக்கும் ஒரு ஸ்டீரியோடைப் என நான் கருதுகிறேன்.

நான் பார்த்தவரை அது உண்மையாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில், “அர்ப்பணிப்புள்ள நடிகர்களைத்தான் நான் தேர்வு செய்தேன். அவர்கள் எந்த மொழி, எந்த ஊர் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டார். தமிழிலும் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் நடிகர்கள் இருக்கிறோம் என்பதை மாரி செல்வராஜ் சார் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எங்களால் முடிந்தளவு உழைத்துதான் நடிக்கிறோம்.
ஆனால், அது உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் வந்து சேருவதில்லை. அதை எப்படி உங்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதும் தெரியவில்லை.ஆனால், அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்கள் தமிழிலும் இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE