திரை விமர்சனம்

 ‘இரவின் விழிகள்’ திரை விமர்சனம்!

சமூக ஊடகங்கள் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட சூழலில் அந்த களத்தை வியூஸ் வெறிக்காகவும் காசு பார்க்கவும் தவறாக பயன்படுத்தும் மோசமான மனநிலை கொண்டவர்களும் அதிகமாகிவிட்டார்கள். சில வீடியோக்களை பார்க்கும்போது எரிச்சலும் ஏற்படுகிறது. அப்படியான காணொளிகளை போடுபவர்களை போட்டுத்தள்ளுகிறான் மர்ம நபர். அவன் யார்? கொலையாளிக்கும் கொலையானவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதற்கு விடை சொல்கிறது ‘இரவின் விழிகள்’.

அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார் கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹேந்திரன்.

நாயகியாக நீமாரேய் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து கவர்ச்சியிலும் கலக்கியுள்ளார். கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தனது நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவை ஞாபகப்படுத்தினாலும், திரைக்கதைக்கு அவரது நடிப்பு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணப்பட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “கருப்பு…” பாடல் வீரியம் மிக்கதாகவும், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளை பளிச்சென்று படமாகி படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் சில யுத்திகளை பயன்படுத்தியிருப்பது தெரிந்தாலும், அதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆர்.ராமர், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருக்கிறார்.

சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் செண்டிமெண்ட் காட்சிகளால் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.

பொருளாதார ரீதியாக கதை சொல்லல் மற்றும் காட்சிப்படுத்திய முறையில் சில குறைகள் இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு சொல்லப்பட வேண்டிய கதையாக உள்ளது ‘இரவின் விழிகள்’.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE