மகேந்திரனின் அர்ப்பணிப்பும் அசத்தல் ஆக்ஷனும் : ‘பல்ஸ்’ விழாவில் ஹீரோவின் திறமையை பாராட்டிய பிரபலங்கள்!
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் நவீன் கணேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கும் படம் ‘பல்ஸ்’. கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அபிஷேக் A R இசையாமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது:-
“இந்த படத்தில் நான் நடிக்கத் தொடங்கியபோது, படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. பின்னர் இயக்குநர் நவீன், வாட்ஸ்அப்பில் படத்தின் ஸ்டில் அனுப்பியபோது, ஆங்கில அறிவு குறைவினால் படத்தின் பெயரை ‘Pulse’ என்பதற்கு பதிலாக ‘Piles’ என்று தவறாக புரிந்து கொண்டேன். அதனால் கதை குறித்து பல்வேறு கற்பனைகள் உருவானது. பின்னர் இயக்குநர் நவீன் தெளிவாக விளக்கி, படத்தின் தலைப்பின் உண்மையான அர்த்தத்தை புரிய வைத்தார். அதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த கோபமும் இல்லாமல், அனைவரிடமிருந்தும் சிறப்பான வேலை வாங்கும் திறன் அவருக்கு உள்ளது. தயாரிப்பாளர் அளித்த முழு ஆதரவுடன் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும்.

ஒரு காட்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டது அவரது டெடிகேஷனை காட்டுகிறது. இதுதான் உண்மையான ஹீரோவின் அடையாளம். பிக் பாஸ் காலத்திலிருந்தே நாங்கள் சகோதர பாசத்துடன் இருந்தோம். இன்று அவர் இந்த விழாவுக்கு வந்து வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சி. அவரது ஆசீர்வாதத்துடனும் ரசிகர்களின் ஆதரவுடனும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடையும்” என்றார்.
நடிகை அர்ச்சனா பேசியதாவது:-
“மாதவிடாய் என்பது எந்த வகையிலும் தீட்டு அல்ல. அது கடவுள் பெண்களுக்கு கொடுத்த ஒரு வரம். அதுவே பெண்களை தாயாக மாற்றும் அடிப்படை. அதில் அவமானப்பட வேண்டிய எந்த விஷயமும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் வலியை புரிந்து கொண்டு, ஒரு சகோதரராக கூல் சுரேஷ் அண்ணன் எனக்கு உதவி செய்தார். பெண்கள் அந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மனநிலை மாற்றங்களை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய புரிதலுடன் செயல்பட்ட ஒரு ஆணாக அவர் இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது. வெளியில் அவர் பேசும் விதம் வேறாக இருந்தாலும், அவருக்குள் மிகுந்த பாசமும் மனிதநேயமும் கொண்ட ஒரு அண்ணன் இருக்கிறார்.
படத்தின் ட்ரைலர் மிகவும் வலுவாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கதாநாயகன் மகேந்திரன் ஒவ்வொரு காட்சியிலும் காட்டிய உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் செய்த துணிச்சலான முயற்சிகள் வியக்கத்தக்கவை. இயக்குநர் முதல் படத்திலேயே இவ்வளவு வலுவான ஹாஸ்பிட்டல் த்ரில்லர் கதையை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நல்ல குழுவை நம்பி முதலீடு செய்துள்ளீர்கள். இந்த படம் கண்டிப்பாக நல்ல வர்த்தக வெற்றியை தரும்” என்றார்.
நடிகர் சேது பேசியதாவது:-
“இயக்குநர் நவீன் கணேஷ் எனக்கு நீண்ட நாட்களாக தெரிந்தவர். இந்த கதையை அவர் சொன்னபோதே இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது. ட்ரைலரை பார்த்தபோது அது மிகுந்த பரபரப்புடனும், மிரட்டலாகவும் இருந்தது. மியூசிக் டைரக்டர் த்ரில்லர் படத்துக்கு தேவையான சரியான பிஜிஎம்ஐ கொடுத்திருக்கிறார். பின்னணி இசை படத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. ஹீரோவை நான் ‘மாஸ்டர்’ படத்திலிருந்தே கவனித்து வருகிறேன். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர். இந்த படத்தில் அவர் எடுத்த முயற்சி ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர் எடுத்த ரிஸ்க் பாராட்டத்தக்கது. இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். கூல் சுரேஷ் இல்லாமல் இன்றைய விழாக்கள் முழுமை அடையாது. நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விப்பது அவரின் தனிச்சிறப்பு.” என்றார்.

இயக்குனர் நவீன் கணேஷ் பேசியதாவது:-
“புதுமுக இயக்குநராக இருந்த என்னிடம் முழு நம்பிக்கை வைத்து, கதையின் மீது நம்பிக்கை வைத்து எந்த சமரசமும் இல்லாமல் படம் எடுக்க முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. பட்ஜெட் குறித்து கவலைப்படாமல், படத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார். ஹாஸ்பிட்டல் கதைக்களம் என்பதால் ரியல் லொகேஷன்களில் படமாக்கினோம். அதற்கு ஏற்ற வகையில் ஆர்ட் டைரக்டர் முகமது மிக இயல்பான செட் வடிவமைப்பை செய்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி எடிட்டராக இருக்கும் சோம் சேகர் இந்த படத்துக்கு பணியாற்றியது எனக்கு பெரிய பலம். ஒரு த்ரில்லர் படத்துக்கு மிக முக்கியமான எடிட்டிங்கை அவர் கிரிஸ்பாகவும் வேகமாகவும் வழங்கியுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா பெயருக்கேற்ற வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் ரோப் மற்றும் டூப் இல்லாமல் மகேந்திரன் செய்த சண்டைக் காட்சி தியேட்டரில் நிச்சயம் கைத்தட்டல் பெறும். மாஸ்டர் மகேந்திரன் உண்மையான ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’. நான் நினைப்பதை திரையில் அப்படியே கொண்டு வருபவர். ‘ஓகே’ சொன்ன பிறகும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் டேக் கேட்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அந்த உழைப்பே படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.
படத்தின் தலைப்பு ‘பைல்ஸ்’ அல்ல, ‘பல்ஸ்’. மனிதனின் இதயத் துடிப்பு எப்படி தொடர்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல் இந்த படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கும் இடைவிடாத பதற்றம் இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். கூல் சுரேஷ் இந்த படத்தில் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் சேது மற்றும் அர்ச்சனா விழாவுக்கு வந்து வாழ்த்தியதற்காக நன்றி” என்றார்.

நடிகர் மகேந்திரன் பேசியதாவது:-
“இயக்குநர் நவீன் எனக்கு பல வருடங்களாக பழக்கம். நாங்கள் இருவரும் பல பயணங்களை பகிர்ந்த நண்பர்கள். அவர் இந்த கதையை சொல்லும்போது, நான் முதலில் ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நண்பராகவே கேட்டேன். ஆனால் கதையை கேட்க கேட்க அதன் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. ஒரு ரியல் ஹாஸ்பிட்டல் போலவே தோன்ற வேண்டும். அதே நேரத்தில் ஷூட்டிங்கிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அந்த சவாலான பணியை ஆர்ட் டைரக்டர் முகமது மிக நேர்த்தியாக செய்துள்ளார். ஒரு புதுமுக குழுவை முழுமையாக நம்பி, எந்த கேள்விகளும் இல்லாமல் எங்களுக்கு தயாரிப்பாளர் விக்ரம் சுதந்திரம் கொடுத்தது மிகப் பெரிய விஷயம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கை கிடைப்பது அரிது. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூல்சுரேஷின் இருப்பே ஒரு கலகலப்பை உருவாக்கும். படத்தில் அவர் காமெடியைத் தாண்டி ஒரு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா அளித்த தைரியமும் பாதுகாப்பும் காரணமாக, கிளைமாக்ஸ் காட்சிகளை இயல்பாக செய்ய முடிந்தது. பிஜிஎம் வெறும் பின்னணி இசை அல்ல; ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்ரைலரில் கேட்டது ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே” என்றார்.
நடிகர் KPY சரத் பேசும்போது, “படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ட்ரைலரை பார்க்கும் போது படம் மிகவும் வலுவான மெடிக்கல் த்ரில்லராக உருவாகியிருப்பது தெரிகிறது. குறிப்பாக பின்னணி இசை மிக உயர்ந்த தரத்தில் அமைந்துள்ளது. படத்தின் ஹீரோ நாங்கள் எல்லாம் ஒரே நண்பர்கள் குழு. அவர் எவ்வளவு கடினமாக உழைப்பவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். உடலை வருத்தி, ஆபத்தான ஆக்சன் காட்சிகளில் அவர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.” என்றார்.
தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது:-
“இன்றைய சூழலில் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதே தயாரிப்பாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. அந்த நிலையில், புதுமுகங்களை நம்பி, ஒரு நல்ல கதையின் மீது நம்பிக்கை வைத்து பெரிய முதலீடு செய்த தயாரிப்பாளர் விக்ரம் பாராட்டுக்குரியவர். இது மிகுந்த தைரியம் தேவைப்படும் முடிவு.‘பல்ஸ்’ என்ற தலைப்பை பற்றி பலர் பேசினார்கள். ஆனால் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது தலைப்பு அல்ல, கதையில் இருக்கும் வலிமை தான். ஹாஸ்பிட்டல் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த கதையில், பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு உள்ளடக்கம் இருக்க வேண்டும்.
சின்ன வயதிலிருந்தே மகேந்திரனை கவனித்து வருகிறேன். ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்தாலும், தனக்கான இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். உழைப்பு ஒருநாளும் வீண் போகாது. ஆனால் ஹீரோவான பிறகு சம்பள விஷயங்களில் தயாரிப்பாளரை நினைத்தே முடிவு எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் நலமுடன் இருந்தால் தான் சினிமா துறை நலமாக இருக்கும்.பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கி, படம் ஓடாத போது நஷ்டம் முழுவதும் தயாரிப்பாளருக்கு தான் ஏற்படுகிறது. ஆனால் ‘பல்ஸ்’ போன்ற சின்ன படங்கள்தான் புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, சினிமாவை உயிரோடு வைத்திருக்கின்றன.” என்றார்.

