சினிமா செய்திகள்

20 நாட்களில் எடுக்கப்பட்ட பரத் படம்: மிரட்டும் ‘மிரள்’

டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம்  ‘மிரள்’. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு  பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இவ்விழாவினில்..

நடிகை வாணி போஜன் பேசியபோது, “இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது:-

Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் .  பேச்சுலர் படத்தின் ஒரு பாடலுக்காக 5 மாதங்கள் எடுத்து கொண்டனர். இந்த படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படம் பார்த்து விட்டேன் படம் 20 நாளில் எடுத்தது போல் இருக்காது. மிகப்பெரிய பிரமிப்பை தரும் படைப்பாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்”என்றார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது:-

“இந்த தலைமுறையினர் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சிந்தனையில் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கிறது.  இது 20 நாளில் எடுத்த படம் மாதிரியே இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்திருக்கிறார். பெரிய திட்டமிடலுடன் படத்தை தந்துள்ளார். Axess Film Factory டில்லிபாபு நல்ல படங்களாக வெற்றிப்படங்களாக தயாரித்து வருகிறார். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.”

இயக்குநர் சக்திவேல் பேசியதாவது:-

Axess Film Factory தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகள் தந்து வருகிறார்கள் அவர்கள் தயாரிப்பில் என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்பும் தான் காரணம். பரத் சார் தான் இந்த படம் உருவாக முதல் காரணம், அவர் மூலமாக தான் தயாரிப்பாளர் இந்த கதையை கேட்டு தயாரிக்க ஒத்து கொண்டார். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்தார். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்”

படத்தின் நாயகன் பரத் பேசியதாவது:-

“சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லிப்பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்த கதை பற்றியும், இயக்குனர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒத்துகொண்டார். இந்த படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஒருசேர ஒத்து போக கூடிய நபர் இயக்குனர். இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே எஸ் ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி.”

தயாரிப்பாளர் டில்லி பாபு பேசியதாவது:-

“ஒரு தயாரிப்பாளராக எங்களது பொறுப்பு அதிகம். படத்தின் கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்தையும் கதைக்கு ஏற்றார் போல் அமைக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் கதைக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்போம். நாங்கள் எடுத்த பெரும்பாலான படங்களை அறிமுக இயக்குனர்களே இயக்கியுள்ளனர். இது போன்ற படங்கள் மூலமாக தான், நாங்கள் நல்ல நண்பர்களை சம்பாதித்துள்ளோம். இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும்,  முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்து தான் உருவாக்கினோம். பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள். இந்த படம் குடும்பங்கள் பார்க்ககூடிய ஒரு படமாக இருக்கும்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE