‘ஃப்ரைடே’ திரை விமர்சனம்!
பணத்துக்காக கூலிப்படையில் ஒருவனாக வேலை செய்பவர் அனீஸ் மாசிலாமணி. தான் தேர்ந்தெடுத்த பாதையை தன் தம்பியும் தேர்ந்தெடுத்துவிடக்கூடாது என்பதற்காக தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். ஆனால் விதி வேறு மாதிரி விளையாடுகிறது. யெஸ்.. ஒரு கொலை செய்வதற்காக போகும் இடத்தில் கே.பி.ஒய்.தீனாவால் கொல்லப்படுகிறார் அனீஸின் தம்பி. அன்பு தம்பியின் இழப்பு, அனீஸ் மாசிலாமணியை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதற்கு அடுத்தடுத்த காட்சிகள் கதை சொல்கிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அனிஷ் மாசிலாமணி, எளிமையான தோற்றம், அளவான நடிப்பு மூலம் மணி என்ற ரவுடி கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக, தான் ரவுடியாக்கப்பட்ட சூழ்நிலையை நினைத்து வருந்துவதோடு, தனது தம்பியை அத்தகைய இடத்திற்கு வர விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது, என்று ஒவ்வொரு காட்சியிலும் அவரது முதிர்ச்சியான நடிப்பு பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறது.
கே.பி.ஒய் தீனா, ஆரம்பத்தில் எளிமையான கதாபாத்திரமாக இருந்தாலும், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து திரைக்கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.
மைம் கோபி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக மட்டும் இன்றி, தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகியோர் சில இடங்களில் மட்டுமே தோன்றும் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், திரைக்கதையில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், எளிமையான லொக்கேஷன்களாக இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி கதைக்களத்தின் பயங்கரத்தை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இடங்களில் இசையமைப்பாளர் டுமே, சில இடங்களில் தட்டுமுட்டு சாமான்களை தட்டுவது போல் இருந்தாலும், பல இடங்களில் தன் பின்னணி இசையால் திரைக்கதைக்கு கூடுதல் விறுவிறுப்பளித்திருக்கிறார்.
வெட்டு, குத்து என்று பயணிக்கும் ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக சொன்னாலும், வன்முறை காட்சிகளை கூட, திரைக்கதையின் சுவாராஸ்யத்தை அதிகரிக்கும் அம்சங்களாக்கி பார்வையாளர்களை அவ்வபோது சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது பிரவீன்.எம்-ன் படத்தொகுப்பு.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி வெங்கடேஷ், ஒரு சாதாரண கதையை, விவரிக்கும் விதம் மற்றும் காட்சியமைப்புகள் மூலம் சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
வன்முறை சூழ்ந்த ரவுடிகளின் வாழ்க்கையை இரத்தம் தெறிக்கும் விதமாக காட்டாமல், அவர்களின் குடும்பம், எதிர்பார்ப்பு, சோகம், காதல், இழப்பு, பழிதீர்க்கும் எண்ணம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு இயல்பான வாழ்க்கையாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ஹரி வெங்கடேஷ், அதை திரை மொழியில் சுவைப்பட சொல்லியிருக்கிறார்.

