” ‘இதயம் முரளி’ என் அப்பாவுக்கான மரியாதை!” அதர்வா நெகிழ்ச்சி!
கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி லகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘இதயம் முரளி’. படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நடிகர் அதர்வா முரளி பேசியதாவது:-
“உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.
‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணம்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், விக்ரம் மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் என் நன்றி. இன்றைய காலத்தில் இவ்வளவு வண்ணமயமான, மனதை வருடும், இலகுவான காதல் கதையை தயாரிக்க முன்வருவது மிகப்பெரிய விஷயம். அதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கும் என் நன்றி.
இப்படிப்பட்ட காதல் கதைக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகாஷிடம் ‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் யார்?’ என்று கேட்டபோது, ‘மனோஜ் பரமஹம்சா சார் தான்’ என்று சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு பாடலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் முழு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ‘எல்லோரையும் லட்டு மாதிரி அழகாகக் காட்டுகிறேன்’ என்று அவர் சொன்னது போலவே, திரையில் அனைவரையும் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் சாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. சில படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே தயாராகச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. காலியான மனதோடு செட்டுக்கு செல்வோம். அங்கேயே காட்சிகள் பற்றி பேசுவோம். சில சமயங்களில் வசனங்களையே மாற்றி, புதிதாக யோசித்து நடித்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் பல இடங்களில் தன்னிச்சையாகச் செய்த விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த அளவுக்கு அதிகமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக அழகாக வடிவமைத்தவர் எடிட்டர் பிரதீப். உண்மையாகவே இந்தப் படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான திரைப்படமாக உருவானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதை அழகாகத் தொகுத்ததற்காக பிரதீப்புக்கு என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எழுதிய ஒவ்வொரு வசனமும் மிகச் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த பல வசனங்களும் அவருடைய எழுத்துதான். திங்க் மியூசிக் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி. ஒரு நல்ல படத்தை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் இசைப் பயணத்திலும் அவர் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் படப்பிடிப்பு முன்னேறியபோது ஆறாவது, ஏழாவது, எட்டாவது பாடல்களும் இணைந்தன. முதலில் ‘இதயா’ பாடலைக் கேட்டபோது, அதுதான் இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் ‘இதயமே இதயமே’ பாடல் வந்தபோது அது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.
தமன் சார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் அவர் இந்தப் படத்தில் நடித்தும் இருந்தார். இவ்வளவு பிஸியான இசையமைப்பாளராக இருந்தும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார்.

இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் படப்பிடிப்புக் காலத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு படங்களிலும் நடித்து வந்தோம். ஆனால் எப்போது இந்தப் படம் குறித்து சந்தேகம் வந்தாலும் நான் தமன் சாரிடமே சென்று கேட்பேன். அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார் – ‘ப்ளாக்பஸ்டர்… ப்ளாக்பஸ்டர்!’ என்று. ஒரு கட்டத்தில் அவருடைய அந்த நம்பிக்கையைத்தான் நாங்களும் நம்ப ஆரம்பித்தோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுத்தார். அதற்காக தமன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.”
“இந்தப் படத்தில் பணியாற்றிய முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. கிரிஷ், பிரவீன் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.ஒரு படம் முடிந்த பிறகு, ‘இவ்வளவு சீக்கிரம் இந்தப் பயணம் முடிந்துவிட்டதே’ என்ற ஒரு வெறுமை உணர்வு எல்லோருக்கும் இருக்கும். ‘இதயம் முரளி’ முடிந்தபோது அந்த உணர்வு இந்தப் படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
எங்களுக்காக ‘இதயம் முரளி’ என்று ஒரு வாட்ஸ்அப் குழு இருக்கிறது. அதில் ஆகாஷ் ஒரு நாள், ‘படத்தில் இதயாவும் ஜுஜ்ஜுவும் பேசுவது போல, மாலை ஐந்து மணிக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை; இதயம் முரளி முடிந்துவிட்டதே’ என்று ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அந்த உணர்வை நாங்கள் அனைவரும் பகிர்ந்துகொண்டோம்.
இன்று இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் கடைசி நாள். அதனால் இந்தக் குழுவை இனிமேல் இப்படி அடிக்கடி சந்திக்க முடியாது என்ற எண்ணமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்கள் குழு கிடைத்தது. டிராவிட், சுதாகர், ரக்ஷன், ஏஞ்சலின், கயாது, ப்ரீத்தி, நிஹாரிகா என அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் தனியாக ஒரு ‘பாய்ஸ் குரூப்’ கூட உருவானது. சில நேரங்களில் அவர்களுக்கு படப்பிடிப்பே இருக்காது. இருந்தாலும் செட்டுக்கு வந்துவிடுவார்கள். ரக்ஷனிடம் ஒருநாள், ‘இன்று உங்களுக்கு காட்சி இல்லையே?’ என்று கேட்டபோது, ‘லஞ்ச் சாப்பிடத்தான் வந்தேன்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்தப் படப்பிடிப்பு தளம் அனைவருக்கும் சொந்த வீட்டைப் போல மாறிவிட்டது. பல படங்களில் இப்படிப்பட்ட சூழல் அமைவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவோம். ஆரம்பத்தில் அது ஒரு கட்டாயம் போலத் தோன்றினாலும், போகப் போக அது ஒரு குடும்ப உணர்வாக மாறிவிட்டது. திரையில் தெரியும் அந்த நட்புக்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அந்தச் சிறிய சிறிய தருணங்கள்தான். இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் நான் பலமுறை கேட்டேன். ஏனெனில் ‘இதயம்’ என்றால் அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் ஒரு இலகுவான காதல் கதையைச் சொல்கிறோம். அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ஆகாஷ் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்றார். இன்று அவர் சொன்னதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்ததால்தான் எங்களுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராக தனது கனவுக்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளையும், பல சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது..,
“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி.
அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.
தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.
சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு.
உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.
என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.
இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.
மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.”
இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

