’கட்டிலில்’ சிருஷ்டி டாங்கேவுக்கு என்ன வேலை?: இயக்குனர் கணேஷ்பாபு பேச்சு
Maple Leafs Productions தயாரிப்பில், எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கட்டில்’. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் சிங்கிள் டிராக் பாடலை தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வெளிட்டு பேசியதாவது:-
“மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன். மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்கள் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார். தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து நிறைவேற்றி தரும் என்று உறுதி கூறுகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”என்றார்.
இயக்குநரும் நடிகருமான EV கணேஷ் பாபு பேசியதாவது:-
“நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன்தான். 2023ல் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின் அவர்கள்தான். அவரது ஊக்கத்தில்தான் இந்தத் திரைப்படம் நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். சித் ஶ்ரீராம் மிக அரிதாக தேர்ந்தெடுத்து பாடல்கள் பாடுகிறார். எங்கள் படத்தில் நான்கு மொழிகளில் அவர் பாடித் தந்தது மகிழ்ச்சி. நடிகை சிருஷ்டி டாங்கே கட்டிலில் தமிழ்ப்பெண்ணாகவே மாறிவிட்டார். இந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமையும். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு இப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. நம் பாரம்பரியத்தை போற்றும் படமாக இப்படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்”என்றார்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் பேசியதாவது:-
“நான் பிரஸ்ஸில் போட்டோகிராஃபராகதான் வாழ்வை ஆரம்பித்தேன். நான் பத்திரிக்கையாளன் என்று சொல்வதில் பெருமை. லெனின் சார் கூப்பிட்டு இந்தக்கதை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிக உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தது. சென்னை, காரைக்குடி பகுதிகளில் படமெடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த்தேவா பேசியதாவது:-
“இந்த வாய்ப்பை தந்த, சினிமாவுக்கு காட்ஃபாதராக இருக்கும் லெனின் சாருக்கு நன்றி. மிக அற்புதமாகப் படத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு நன்றி. வைட் ஆங்கிள் ரவி சார் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். என் இசையில் கிளாசிக்கல் மியூசிக் இல்லையே என வருத்தப்படுவேன். ‘கட்டில்’ படம் மூலமாக அது மாறும். இந்தப்படத்தில் வைரமுத்து சார் அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.”என்றார்.
நடிகை சிருஷ்டி டாங்கே பேசியதாவது:-
“இந்தப்படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. தமிழ் பாரம்பரியத்தை இந்தப்படம் எடுத்துக்காட்டும். இந்தப்படத்தை நான் மிகவும் நம்புகிறேன். இந்தப்பாடல்கள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்குமென நம்புகிறேன். இ.வி.கணேஷ்பாபு சார், லெனின் சார், ஶ்ரீகாந்த்தேவா சார், வைட் ஆங்கிள் ரவிசங்கரன் சார் இவர்கள் நால்வரும்தான் படம் சிறப்பாக வரக்காரணம். அவர்களுக்கு மிகவும் நன்றி”என்றார்.