சினிமா செய்திகள்

பிரியங்கா மோகனின் ‘மேட் இன் கொரியா’ : 36 மொழிகளில் வெளியாகிறது!

*நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், “கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.

பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.

அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.

நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.

நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE