‘லவ் ஓ லவ்’ திரை விமர்சனம்!
தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பவிஷ், ஹீரோயி நாகதுர்காவை நாலு ஆண்டுகள் காதலிக்கிறார். காதலுக்காக, காதலிக்காக ஏகப்பட்ட செலவு செய்து 15 லட்சம் கடனாளி ஆகிறார். குடும்பத்தில், வேலையில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒரு கட்டத்தில் இந்த காதல் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. அப்போது இவளை காதலித்ததால் 4 ஆண்டுகள் டார்ச்சர் அனுபவித்தேன். அடுத்த நாலுமாதம் நான் அனுபவித்ததை அவள் அனுபவிக்க வேண்டும், அவருக்கு நான் செய்ததை போல் அவர் எனக்கு திருப்பி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நிபந்தனை… என போலீசுக்கும் கெ வைக்கிறார். 4 மாதம் அப்படி இருக்க ஓகே என்கிறார் காதலி. அதன்பின் என்ன நடக்கிறது? அந்த காதல் சக்சஸ் ஆனதா? யார் மீது தவறு? கிளைமாக்சில் நடப்பது என்ன? என்பது லவ் ஓ லவ் கதை.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்குபின் தனுஷ் மருமகன் பவிஷ் ஹீரோவாக நடித்த 2வது படம். நாகதுர்காவுடனான காதல், காதலியின் ஓவர் அன்பால் டார்ச்சரால் அவஸ்தை படுகிற இடங்கள், காதல், செலவால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சந்திப்பது, கடன் காரர்கள் தொல்லைக்கு ஆளாகிற இடங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார். பிற்பாதியில் காதலியை பழி வாங்குகிற, பாடம் கற்பிக்கும் இடங்களிலும் கலக்கி இருக்கிறார். பவிஷ் யூத் ஹீரோவாக, துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் டான்சில் கூட பின்னி எடுக்கிறார். என்ன சில இடங்களில் மாமா தனுஷ் நடிப்பு சாயல் வருவதை வருங்காலத்தில் தவிர்க்கலாம்.
காதலியாக வரும் நாகதுர்கா தெலுங்கானாவில் பிரபல யூடியூப்பர், டான்சர். அவந்திகா என்ற அந்த கேரக்டருக்கு பக்கா பொருந்தி இருக்கிறார். பணத்தின், காலத்தின் மதிப்பு உணராமல் அவர் ஆடுகிற ஆட்டம், பின்னர் ஹீரோ நிபந்தனையால் சிக்க தவிப்பது ரசிக்க வை க்கிறது. கிளைமாக்சில் அவருக்கும் ஹீரோவுக்குமான எமோசனல் சீன்களிலும் கவர்கிறார். சினிமா ஹீரோயின் மாதிரி இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் மாதிரி இருப்பதும் பிளஸ்.
இவர்கள் காதல் சம்பந்தப்பட்ட வித்தியாசமான வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வருகிறார் செல்வராகவன். அவர் விசாரிக்கும் இடங்கள் விறுவிறு. ஆனாலும் அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். அவர் கேரக்டரை விரிவுப்படுத்தி இருக்கலாம். மாதர் சங்க தலைவியாக வரும் வனிதா கேரக்டர் சில சமயம் ஓகே, பல சமயம் நாடகத்தனமான நடிப்பை தருகிறது. பாடல் காட்சியில் ஆடுகிற ஆட்டமும் அசத்தல்.
ஹீரோ அப்பாவாக வரும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு குறைவான சீன்கள் தான். அவரும் வழக்கமான அப்பா போல அட்வைஸ் செய்து, கஷ்டத்தில் உருகி காணாமல் போகிறார். அவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. ஹீரோ அம்மா சவுந்தர்யா மனதில் நிற்கிறார்.
ஹீரோயின் அம்மாவாக வரும் ரம்யா கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் நன்றாக நடித்து நறுக் வசனம் பேசுகிறார். மற்ற கேரக்டர்கள் வழக்கமானவை அல்லது குறிப்பிட்டு சொல்ல முடியாதவை
பாக்சன் இசையில் வாடி பொட்டபுள்ள ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பிஜி முத்தையா ஒளிப்பதிவில் குறைவில்லை.
காதலியின் ஆர்வக்கோளாறு, பொறுப்பற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட காதலன், அதே பாணியில் அவளை பழி வாங்கி தவறை உணர வைக்கும் கதை. கொஞ்சம் தனுஷின் தேவதையை கண்டேன் சாயலில் இருக்கிறது. ஹீரோவும் சில இடங்களில் தனுஷ் மாதிரி நடிக்கிறார்.
ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரும் முக்கியமான இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள். சில இடங்களில் எரிச்சல் அடைய வைக்கிறார்கள். காதல் சீன்களில் எமோசன் குறைந்து, கிண்டல், கேலி, பழி வாங்கும்தன்மை, ஆணாதிக்க மனப்பான்மை இருப்பது கதையை பின்னோக்கி நகர்த்துகிறது. பெண்கள் சங்கம், பெண்களை பல இடங்களை கிண்டல் செய்கிறது. சில இடங்களில் காதலையும் கொச்சைப்படுத்துகிறது. திரைக்கதையில் திருப்பங்கள், சுவாரஸ்யம் இல்லை. பேசிக் கொண்டே இருப்பதும், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பதும் பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைக்கிறது. காதலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காதலை விரும்புகிறவர்களுக்கு மட்டும் இந்த லவ் பிடிக்கும்.
நன்றி : தினமலர்!

