‘ரூம் பாய்’ திரை விமர்சனம்!
டிராக் 1 :
காவல் நிலையத்தில் தனது தந்தையை ஒருவாரமாக காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் ஒரு பெண்.
டிராக் 2:
ஏலகிரி தங்கும் விடுதியில் பணியாற்றும் இளைஞர்கள் தங்களது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் விடுதி மேலாளர் அவர்களை நைய புடைத்து, இங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்க தப்பிக்கமுடியாது என்று வில்லத்தனம் காட்டுகிறார்.
டிராக் 3 :
சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து விடுதலையாகிவரும் நாயகன் நிகில் ஏலகிரி தங்கும் விடுதியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு சுற்றுலாவுக்காக வரும் ஹர்ஷாவுடன் காதலாகிறார். காதல் டிராக் பாதியில் முடியும்போது, விடுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்களை கண்டுபிடிக்கிறார். இதில் விடுதி மேலாளருடன் ஏற்படும் மோதலில் மேலாளர் கொல்லப்படுகிறார்.
இந்த மூன்று டிராக்குகளையும் ஒரு முடிச்சில் சேர்த்தால் ‘ரூம்பாய்’ கதை ரெடி.

நாயகன் நிகிலுக்கு இது முதல்படம் என்றாலும் பாசம், நேசம், காதல், மோதல் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் உயிர்கொடுத்து நல்ல மதிப்பெண் பெற முயற்சித்திருக்கிறார்.
நாயகி ஹர்ஷா லட்சணமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் குறைவான கதாபாத்திரமாக இருக்கிறது.
விடுதி ஊழியராக வரும் காத்துக்கருப்பு கலை அடிக்கும் காமெடி ரசிக்கும்படி இல்லை. ஓவர் லூப்.
இவர்களுடன் பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, பிரபாகர் ஆகியோர் அவரவர் பங்கினை சரியாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சி.பாரதிராஜன்,இசையமைப்பாளர் வேலன் சகாதேவன் ஆகியோர் பட்ஜெட்டுக்கு தகுந்த தரத்தையும் உழைப்பையும் தந்துள்ளனர்.
‘ரூம் பாய்’ டைட்டிலை வைத்துக்கொண்டு ’ஏ’டாகூட காட்சிகளை அமைத்திருக்கலாம். அனால் அப்படியெல்லாம் இல்லாமல் குடும்ப பாசம், தங்கை செண்ட்டிமெண்ட் என்று அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் கதையை கையாண்டதற்காகவே இயக்குநர் ஜெகன் ராயனை பாராட்டலம்.
‘ரூம் பாய்’ ஏலகிரியை சுற்றி காட்டுகிறான்.

