குடும்பமே கலங்கிவிட்டோம் : ‘இதயம் முரளி’ சக்சஸ் மீட்டில் எமோஷனலான அதர்வா!
‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் ‘இதயம் முரளி’. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் படத்தின் நாயகன் அதர்வா கலந்துகொண்டு பேசியதாவது:-
“ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தைச் சிறப்பாக எடிட் செய்த எடிட்டருக்கு நன்றி. ஏனென்றால் இந்தப் படத்தில் நானே 4 மணி நேரம் டப்பிங் செய்திருக்கிறேன். அதையெல்லாம் நாம் படமாக ரிலீஸ் செய்திருக்க முடியாது.
தமன் சார் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் சப்போர்ட் செய்திருக்கிறார். நடிப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இசையமைத்துவிட்டு வருவார். சின்னி ஜெயந்த் சார் என் அப்பாவின் மிக நெருங்கிய நண்பர். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

அவர் இந்தப் படத்தில் ஒரு லைன் சொன்னது உண்மையில் என் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. குறிப்பாக ‘பொட்டு வைத்த வட்ட நிலா’ அந்தப் பாடல் போடும்போது நான் மட்டும் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரும் எமோஷனலாகி விட்டோம். இந்த ‘இதயம் முரளி’ டீமை எல்லோரும் மிஸ் செய்வோம்.
நடிக்க வந்த இடத்தில் எல்லோரும் நெருக்கமாகி விட்டோம். எல்லோரும் ஒரே குரூப்பாக மாறிவிட்டோம். படப்பிடிப்பில் லன்ச் எல்லாரும் சேர்ந்துதான் சாப்பிடுவோம். இந்த டைட்டில் வைக்கும்போது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஆகாஷ், ‘என்னை நம்புங்கள்; கண்டிப்பாக நன்றாக வரும்’ என்று சொன்னார்.
அந்த வகையில் எனது இயக்குநர் ஆகாஷிற்கு நன்றி. அதை அவர் நிரூபித்துவிட்டார். எங்கள் அப்பாவிற்குச் சின்ன ட்ரிப்யூட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நண்பராக வந்து ஆகாஷ் அதைச் செய்துவிட்டார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய உங்களுக்கு எல்லோருக்கும் நன்றி”
கயாடு லோஹர் பேசியதாவது:-

“தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம் ‘இதயம் முரளி’தான். அதனால் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி ஆகாஷ். மக்கள் நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள். அமுதா கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்தக் கதாபாத்திரத்தை என்னை நம்பிக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. மீண்டும் இதே படக்குழு இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆகாஷிடம் கேட்டுக்கொள்கிறேன். ப்ரீத்தி இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். நம்முடைய நட்பு குறித்து உங்களுக்கே தெரியும்.
இதயா (அதர்வா) இந்தப் படத்தில் இருவரும் இணைந்து அதிக இடங்களில் நடிக்கவில்லை என்றாலும் நாம் இணைந்து வரும் காட்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மீண்டும் நாம் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும். இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு ரொம்ப நன்றி”

