வெற்றியின் கதவை திறந்து வைக்கும் ‘தனித்திரு’ குறும்படம்
கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர்
S.K.செந்தில். அவர் இயக்கியுள்ள குறும்படம் ‘தனித்திரு’. இக்குறும்படம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலைவர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் ‘தனித்திரு’ குறும்படத்தை வெளியிட்டார்.
புறக்கணிப்பின் வலி இளம்வயதில் மிகக்கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கனவுகளில் ஒன்றிரண்டே நனவாகும். மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போகும். அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த துறையினரையும் விட இதில் வெல்பவர்கள் அடையும் அங்கீகாரமும், பெரும் செல்வமும், இறவாப் புகழுமே காரணம். அந்த வகையில் யார் உன்னை புறக்கணித்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம். நீ வென்ற பிறகு உன்னை ஒதுக்கியவர்களே உன் தயவைத் தேடி வருவார்கள் என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லவரும் குறும்படம் தான் ‘தனித்திரு’.
ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தற்போது சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வாழ்கையில் ஜெயிக்கப் போராடும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும். இந்த படத்தில் விஜய் ஷங்கர் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார். இக்குறும்படத்தில் ஊர்வசி அர்ச்சனா, இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், எம். எஸ். பாஸ்கர் ஆகியோருடன் திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர்.
க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் ரூட்டை மாற்றி வண்டியை திருப்பினால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற ஆகப் பெரும் நம்பிக்கையை பார்வையாளர்களுக்குள்ளும் விதைக்கும். ‘தனித்திரு’ குறும்படத்தை பார்த்த மாணவர்களும் இப்படம் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குனர் S.K.செந்தில் உடன் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.