‘தலைநகர்ம் 2’ பட விழாவில் கண்ணீர்விட்ட இயக்குனர்
ரைட் ஐ தியேட்டர்ஸ் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரனுடன் இணைந்து V Z துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘தலைநகரம் 2’ பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி, பாலக் லல்வாணி நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது:-
“எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு எனக்கு செட்டாகாது என்பதால் படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன். ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். பிறகு என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி பெயரைச்ச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படத்தை உங்கள் பார்வைக்குக் கொண்டுவந்துள்ளோம்”
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது:-
“எனக்குத் துரை எப்பவும் பிடித்த இயக்குநர். ஒரு ஃப்ரேம் கூட மிஸ் பண்ண முடியாத அளவில் தலைநகரத்தை இயக்கியுள்ளார். தொட்டி ஜெயா படத்தில் வில்லன் இடத்திற்கே சென்று நாயகன் மோதுவான். அந்த மாதிரி காட்சியைத் திரையில் உருவாக்கிய முதல் இயக்குநர் அவர்தான். அவரது கதைகள் என்றுமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் நல்ல மனதுக்காரராக இருக்கிறார். சுந்தர் சியை திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.”
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது:-
“இயக்குநர் துரை அண்ணன் எனக்கு குரு, அவருடைய நல்ல பழக்கத்தை நான் பின்பற்றி வருகிறேன். சுந்தர் சி சார் உழைப்பு சாதாரணம் இல்லை. 27 வருடம் இந்த துறையில் இருக்கிறார்’ தலை நகரம் முதல் பாகத்தை விட இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் , தயாரிப்பாளர் பிரபாகரருக்கு வாழ்த்துகள் கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்கு வெற்றியாகத்தான் இருக்கும்”என்றார்.
இயக்குநர் சசி பேசியதாவது:-
“நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரெய்லரில் எல்லா காட்சிகளிலும் ஆக்ஷன் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும். எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது. எமோஷன் இல்லாமல் துரை படமே செய்யமாட்டார். அதனால் தான் 20 வருடங்களுக்கு மேலாகத் சினிமாவில் இருக்கிறார். சுந்தர் சி எனக்கு மிகவும் பிடித்த கமர்ஷியல் இயக்குநர். இவரும் சேர்ந்து படம் செய்துள்ளார்கள் கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்”
நடிகர் பரத் பேசியதாவது:-
“என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குநர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். ‘நேபாளி’ படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி. அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால் தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குநராக வலம் வருகிறார். சுந்தர் சி சாரின் படத்தில் நடிக்க ஆசை, இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே உங்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சி சார் அட்டகாசமாக இந்தக்கதையில் பொருந்திப் போகிறார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது:-
“ 2 மணி நேரப்படத்தில் ரசிகனை எப்படிக் கட்டிப்போட வேண்டும் என்று தெரிந்தவர் சுந்தர்.சி. நிறையத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவர். தலைநகரம் படத்தை அவர் இயக்கியிருந்தார். இப்போது தலைநகரம் 2 வந்திருப்பது மகிழ்ச்சி. துரை சார் நிறைய வெற்றிப்படங்கள் தந்தவர். இவர்கள் கூட்டணியில் இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது:-
“இயக்குநர் துரை மிக எமோஷலான மனிதர். எப்போதும் உரிமையோடு பேசுவார். பழனி படத்திற்குப் பிறகு நேபாளியில் பரத்தை வைத்து மிரட்டியிருந்தார். அப்போதுதான் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என உணர்ந்தேன். துரை எப்போதும் சினிமாவை மட்டுமே நேசிப்பவர். அவர் வெற்றிபெற வேண்டும். சுந்தர் சி இத்தனை காலம் சினிமாவில் தாக்குப்பிடிக்கக் காரணம் அவரின் திட்டமிடல் அபாரமானது. இந்தக்கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துகள்”
படத்தின் நாயகன் சுந்தர் சி பேசியதாவது:-
“ தலைநகரம் 2 ஆம் பாகத்தை எடுக்கலாம் என்று யார் சொன்னாலும் கேட்டிருக்க மாட்டேன் ஆனால் துரை சார் கேட்ட போது எனக்கு எந்த யோசனையும் இல்லை. உடனே ஓகே சொல்லி விட்டேன். அவரின் ‘இருட்டு’ படம் மிக அருமையான திரைக்கதை. அந்தப்படத்தை அவர் எடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இருட்டு வெற்றிதான் தலைநகரம் 2 படத்திற்கு ஓகே சொல்ல வைத்தது. இன்னும் நான் படமே பார்க்கவில்லை. அவர் மீதான நம்பிக்கைதான் காரணம். சினிமாவை காதலிக்கும் இயக்குநர்.அவருக்குப் பெரிய சப்போர்ட்டாக இருந்த தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு என் நன்றிகள். இந்தப்படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் துரை சார் செதுக்கியிருக்கிறார். அரண்மனை போல் இந்தப்படமும் எனக்குத் தொடர் படங்களாக அமையும் என நம்புகிறேன்”என்றார்.
இறுதியாக இயக்குநர் V Z துரை பேசியபோது, தனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் சக்ரவர்த்தி மறைவை நினைத்து மேடையில் கண்ணீர்விட்டார். பின்னர் அனைவரையும் ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்த சொல்லி வேண்டுகோள் வைத்தவர், பிறகு பேச்சை தொடங்கினார். “நான் யாரிடமும் துணை இயக்குநராகப் பணி புரியவில்லை , என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் சக்கரவர்த்தி சார் அவருக்கு நன்றி, அவர் பலருக்கு அறிமுகம் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் பெரிய தூண் தயாரிப்பாளர் என் தம்பி பிரபாகர். என் மீது நம்பிக்கை வைத்த ராம்ஜி சாருக்கு நன்றி, ஒளிப்பதிவாளர் மற்றும் இசை அமைப்பாளர் ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றிகள். சுந்தர் சி சார்தான் எனக்கு ஆசிரியர். பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். அவருடன் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய படத்தில் கதையைக் கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டார். இயக்குநர் சசி சாருக்கு நன்றி. நாங்கள் நீண்ட காலமாகப் பார்த்துக் கொள்ளவில்லை எனினும் எங்கள் பந்தம் மாறவே இல்லை. இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி”