‘டாக்ஸிக்’ ட்ரெய்லர் சர்ச்சை: வன்முறை காட்சிகளால் வியாபாரத்திற்கு பின்னடைவு!
யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வன்முறை, துப்பாக்கிச் சூடு மற்றும் ஆபாசத் தன்மை கொண்ட காட்சிகள் குடும்ப ரசிகர்களை படத்திலிருந்து விலக்கக்கூடும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதன் தாக்கம் படத்தின் வியாபாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ட்ரெய்லர், தற்போது படத்தின் கதையைவிட அதன் காட்சியமைப்புகளால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ட்ரெய்லரில் அடுத்தடுத்து இடம்பெறும் வன்முறைக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு, ரத்தம், அலறல் மற்றும் அதிரடியான காட்சியமைப்புகள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, குடும்ப ரசிகர்களை இலக்காகக் கொண்ட திரையரங்க சந்தையில் இப்படத்தின் அணுகுமுறை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரத் தோற்றங்களில் தோன்றுவது மற்றொரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இதில் அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல், எதிர்மறை சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும் வருகிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மேலும், தமிழில் வெளியாகியுள்ள ட்ரெய்லரில் சில வசனங்களுக்கும் கதாபாத்திரங்களின் குரல்களுக்கும் இடையே ஒத்திசைவு இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இது தமிழ் ரசிகர்களின் வரவேற்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் மீதான எதிர்மறை விமர்சனம் நேரடியாக அதன் வசூலை பாதிக்கும் என்று கூறிவிட முடியாது. குறிப்பாக யஷ் போன்ற பெரிய நட்சத்திரத்தின் படம் என்பதால், ரசிகர் எதிர்பார்ப்பு மற்றும் முதல் நாள் வசூல் மீது ட்ரெய்லர் சர்ச்சையின் தாக்கம் எவ்வளவு இருக்கும் என்பது படம் வெளியான பிறகே தெளிவாகும்.
ஆனால், திரையுலக வட்டாரங்களில் தற்போது பேசப்படும் முக்கிய கேள்வி வேறு.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வன்முறை மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை குடும்ப ரசிகர்களை தியேட்டருக்கு வரவிடாமல் செய்தால், அதன் ஒட்டுமொத்த திரையரங்கு வியாபாரம் எதிர்பார்த்த அளவை எட்டுமா? இதுதான் தற்போது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படும் கவலை.
அதே நேரத்தில், ட்ரெய்லருக்கு எதிராக விமர்சனங்கள் எழுவது படத்திற்கு எதிர்மறையான விளம்பரமாக மட்டுமே அமையுமா அல்லது ஆர்வத்தை மேலும் அதிகரிக்குமா என்பதும் முக்கியமான கேள்வி. சில நேரங்களில் சர்ச்சையே ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து, திரையரங்கு வசூலுக்கு சாதகமாக மாறியுள்ள சம்பவங்களும் உள்ளன.
தற்போதைய நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எஆனால் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை, குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ள எதிர்மறை கருத்துகள், படத்தின் திரையரங்கு வரவேற்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கண்காணிக்க வேண்டிய முக்கிய அம்சமாகியுள்ளது.
ட்ரெய்லர் சர்ச்சை படத்திற்கு பின்னடைவாக மாறுமா? அல்லது அதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வசூலுக்கு சாதகமாக மாறுமா? இதற்கான பதில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி படம் திரைக்கு வந்த பிறகே தெரியவரும்.

