‘கேப்டன் மில்லர்’ உலகத் தரமான படம் : அடித்துச்சொல்லும் தனுஷ்
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் – ப்ரியங்கா மோகன் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது:-
தனுஷ் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. சினிமாவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, இயக்குநராக, நடிகராக, பாடகராக கலக்குகிறார். அவர் இயக்கத்தில் ஒரு சில காட்சிகள் நானும் நடித்திருக்கிறேன். மிக நல்ல அனுபவம், நிறையச் சொல்லித்தந்தார். இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். நடிகர் சிவராஜ் குமார் அவர்களுடன் வேலைப் பார்த்தது மகிழ்ச்சி. சுதந்திர காலத்துக்கு முன் நடக்கும் கதையில், இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படம் எடுக்க சத்யஜோதி பிலிம்ஸ் மாதிரியான நிறுவனம் வேண்டும். அவர்கள் இன்னும் நிறைய படம் எடுக்க வேண்டும். இம்மாதிரி படைப்பைச் சரியாக எடுத்துச்சென்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
மாஸ்டர் திலீப் சுப்புராயன் பேசியதாவது:-
தனுஷ் சாருடன் எனக்கு இது 7 வது படம். மிகப்பெரிய ஜர்னி. கேப்டன் மில்லர் எனக்கு லைஃப் டைம் படம். இதில் சிஜுயெல்லாம் இல்லை, லைவ்வாக நிறைய எடுத்திருக்கிறோம். அருணும் நானும் காலேஜுல் இருந்தே ஃபிரண்ட்ஸ். இதில் நிறைய புதுசாக பண்ணியிருக்கிறோம். தனுஷ் சார் தண்ணீர் மாதிரி. எதில் வைத்தாலும், அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். இந்தப்படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதற்காக ஸாரி. சிவாண்ணாவுடன் ரொம்ப நாளாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் நடிகைகளுக்கும் சண்டை காட்சி உள்ளது. டூப் போடாமல் எடுத்திருக்கிறோம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்தனர்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
இந்த மேடையில் இருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தனுஷ் சார் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். கேப்டன் மில்லர் விஷுவல் பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. அடுத்த படத்தில் அவரை வைத்து என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. கர்ணன் முடிந்தவுடன், அவருடன் வேலை பார்க்க சைன் பண்ணினேன். ஆனால் எனக்கு வேறு புராஜக்ட் வந்த போது, என்னை அன்புடன் அனுப்பி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. கர்ணன் செய்யும் போதே, கேப்டன் மில்லர் ஒப்பந்தமாகிவிட்டார். கர்ணனை விட இதில் பயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார். அடுத்த படத்தில் இதை விட, உங்களுக்குப் பெரிய தீனி தர முயற்சிக்கிறேன். இப்படத்தில் என் நண்பர்கள் பலர் வேலைபார்த்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது முதல் ஆளாக எனக்குக் கால் பண்ணி விசாரித்தவர் தனுஷ் சார். தனுஷ் சாரிடம் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் எப்போதும் சினிமாவை கவனித்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றி பெறும்.
நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது:-
கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதை சொன்ன போதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய படத்தை புரடியூஸ் பண்ணுவது மிகப்பெரிய வேலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர், கடுமையாக உழைத்திருக்கிறார். நான் தனுஷ் சாருக்கு பெரிய ஃபேன், அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷம். அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது:-
தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக இப்படம் இருக்கும். எல்லோரும் அவ்வளவு பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். சில படங்கள் செய்யும் போது தான் நாம் பெரிய, முக்கியமான படத்தில் வேலை செய்வதாகத் தோன்றும். இந்தப்படம் அந்த மாதிரியான படம். தனுஷ் சாருடன் பொல்லாதவனில் ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார். ஆனால் ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் எல்லாம் செய்தவுடன், நிறைய விருதுகள் வாங்கி, கலக்கி விட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசியதாவது:-
கேப்டன் மில்லர் படத்தைப் பற்றி எல்லோரும் நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில் நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார் தான். அவருடன் 5 படங்கள் செய்தோம், அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம். இன்னும் பயணம் தொடர்கிறது. அருண் பற்றி முதலில் என் மகன் தான் சொன்னார். அவர் படம் ராக்கி பார்த்தேன். என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப்பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில்தான் தனுஷ் சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார். எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த, விஸ்வாசம் படம் போல, இப்படமும் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக்கடின உழைப்பைத் தந்துள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது…
T.G.தியாகராஜன் சார் என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும், அந்த கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார். ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி. ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம். அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன். அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க வந்தார். அவர் ஒரு ஸ்டார். ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே துப்பாக்கி தந்தபோது பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,
T.G.தியாகராஜன் சார், அர்ஜூன் எல்லோருக்கும் நன்றி. அருண் வந்து கதை சொன்ன போதே, தனுஷ் சார் நடிக்கிறாரா? நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அவரை முதல் படத்திலிருந்தே எனக்குப் பிடிக்கும். சிம்பிள், சூப்பர் ஆக்டர் என்றால் அவர்தான். எப்போதும் அவர் படங்கள் நிறைய முறைப் பார்ப்பேன். இந்தபபட ஷீட்டிங் செம்ம ஜாலியாக இருந்தது. அவருக்காக எப்போதும், நான் நடிக்க தயார். இந்தியாவில் மட்டும் இல்லை, உலக அளவில் சிறந்த ஆக்டர் தனுஷ். இப்படத்தில் சந்தீப், பிரியங்கா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். ஜீவி பிரகாஷ் சூப்பராக மியூசிக் செய்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் தனுஷ் பேசியதாவது :-
இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்புதான். அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரன்தான் இந்தப்படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது. அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார். இது எல்லாம் பண்ண முடியுமா ? என சந்தேகம் வந்தது. அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன், ம்ம்… பண்ணலாம் சார் என்றார். இப்போது படம் பார்க்கும் போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார். பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார். ஜீவி ஐ லவ் யூ. சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன்.
அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப்பெரிய ஆதரவு தந்த, சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப்பெரிது. கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி. கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும்.