பாரதிராஜாவுக்கு என்னாச்சு?.. சிறகடிக்கும் செய்திகள் உண்மையா?…
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா. தொடர்ச்சியாக ஹிட்டுக்களை கொடுத்தவர். செட்டுக்குள் தேங்கிக்கிடந்த சினிமாவை வெட்ட வெளிக்கு எடுத்துவந்து கிராமத்து மண் வாசனையை வெள்ளித்திரையில் கடத்தியவர்.
கிராமிய கதை மட்டுமின்றி ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கைதியின் டைரி’ என க்ரைம் ஏரியாவும் எனக்கு அத்துப்படி என நிருபித்துக் காட்டியவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது மகனும் நடிகருமான மனோஜ் மறைவுக்குப் பிறகு வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.
அவ்வளவுதான்… பாரதிராஜா உடல்நிலை குறித்து கண் காது மூக்கு வைத்து வட்டமடிக்கின்றன செய்திகள்! அவருக்கு நினைவாற்றல் தப்பிவிட்டது; பேசுவது புரியவில்லை என்றெல்லாம் அவிழ்க்கப்பட்டுள்ளது கட்டுக் கதைகள்.
உண்மை என்ன?

இயக்குநர் இமயம் நலமுடன் இருக்கிறார். நெருங்கிய நண்பர்களை விட்டுக்கழைத்து பேசுகிறார். அடிக்கடி மகன் நினைவுகள் வந்து நெஞ்சுக்கூட்டுக்குள் முட்டி மோதினால் கங்கை அமரனை அழைத்து பழைய நினைவுகளை பேசி ஆறுதல் அடைகிறார். அல்லது பாரதிராஜாவின் வீட்டுக்குச் கங்கை அமரன் சென்று ஃபிளாஷ் பேக் சொல்லி இயக்குநரின் கவலையில் இருந்து மடை மாற்றுகிறார்.
இப்படி இருக்கையில் தேவையற்ற சிறகடிக்கும் பொய்ச்செய்திகளை நம்ப வேண்டாம். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவருக்கு சிறுமை சேர்க்க வேண்டாம்!

