‘தடை அதை உடை’ -திரை விமர்சனம்!
சினிமா கனவில் இருக்கும் ஒரு இளைஞர் தயாரிப்பாளருக்கு ஒரு கதை சொல்கிறார். “இதெல்லாம் ஒரு கதையா?.. நல்ல கதையா இருந்தா வாங்க.. இல்லாட்டி போங்க” என்று வெறுப்பேற்றி அனுப்பி வைக்கிறார். நொந்து நூலாகும் இளைஞர், அடுத்து ஒரு கதையுடன் போகிறார். அதுவும் ரிஜக்ட். இப்படி மூன்று கதைகள் ரிஜக்ட் செய்யப்பட, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு கதை பண்ணி அதை தயாரிப்பாளரிடம் சொல்கிறார். இம்முறை சக்சஸ்.
தயாரிப்பாளரால் ரிஜக்ட் செய்யப்பட்ட கதையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதையுமே படத்தின் கதையாக விரிகிறது. அதாவது சினிமாவுக்குள் சினிமா பாணியில் வந்திருக்கும் படமே ‘தடை அதை உடை’.
படத்தில் பிரபல முகம் என்றால் ‘அங்காடி தெரு’ மகேஷ் மட்டுமே. மனிதர் ஒரு சுற்று விரிந்திருக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் சத்தில்லாமல் தடுமாறுகிறது. மற்ற கதாபாத்திரங்களாக சதீஷாக வரும் திருக்குறள் குணா பாபு, கம்பனாக வரும் கே.எம்.பாரிவள்ளல் , கார்த்திக்காக வரும் திருவாரூர் கணேஷ் , வினோத்தாக வரும் மஹாதீர் முகமது ஆகியோர் ஓரளவு கவனிக்க வைக்கிறார்கள்.

திரைக்கதை, தொழில்நுட்பம் ரொம்ப வீக்காக இருந்தாலும் படம் சொல்ல வரும் கருத்து நாட்டுக்கு தேவையான நல்ல கருத்து. சமூக ஊடகத்தை மக்கள் குறிப்பாக சில பெண்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என அறிமுக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான அறிவழகன் முருகேசனின் நல் முயற்சிக்கு சபாஷ்!
முதல் பாதி படத்தில் சொல்லப்படும் ஒரு கதை, வெற்றிமாறன் பட சாயலில் இருப்பது படத்தின் பலம். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, வலியை, தனது அடுத்த தலைமுறையாவது படித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒடுக்கப்பட்ட குடும்பத் தலைவனின் வேட்கையை பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
‘தடை அதை உடை’ சமூகத்திற்கு தேவையான மருந்து!
தொழில்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பு : காந்திமதி பிக்சர்ஸ் – இயக்கம் : அறிவழகன் முருகேசன் – ஒளிப்பதிவு :தங்கப்பாண்டியன் ,சோட்டா மணிகண்டன். இசை : சாய் சுந்தர். பாடல்கள்: அறிவழகன். கலை இயக்கம் : சிவக்குமார், மணி. சண்டைப் பயிற்சி : அசோக் குமார். தயாரிப்பு மேற்பார்வை : வேல்முருகன். நிர்வாகத் தயாரிப்பு : சாமிநாதன் நாகராஜன், காமராஜ் , தமிழ்வாணன்.

