சினிமா செய்திகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘வெள்ள குதிர’ இசை வெளியீட்டு விழா!

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப்படம் 55 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் விதார்த், இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் விதார்த் பேசியதாவது:-

“வெள்ளகுதிர’யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன். ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம். கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில் எனக்கு நண்பர்கள் கிடையாது. அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓரிதான். அவன் எனக்கு முக்கியமான நண்பன். அவன் வீட்டிற்கு போய் வெளியில் வந்த நேரத்தில் எனக்கு ‘மைனா’ படம் கிடைத்தது. மைனா படம் போல் இந்த படமும் சிரமப்பட்டு எடுத்திருக்காங்க. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.”

படத்தின் நாயகி அபிராமி போஸ் பேசுகையில், “ ‘வெள்ள குதிர’ எனக்கு முதல் தமிழ் படம். மலையாளம், மராட்டி ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தாலும், வெள்ள குதிர எனக்கு மிகவும் முக்கியமான படம். தனித்தன்மை வாய்ந்த வாழ்வியல் கதையாக இருந்ததாலும், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததாலும் ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

இசையமைப்பாளர் பரத் ஆசீவகன் பேசுகையில், மூன்று தலைமுறைக்கான இசை குடும்பம் எங்களுடையது.. வெள்ளகுதிர படத்தில் மண்வாசனைகேற்ப மண் மணம் மாறாமல், வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துள்ளேன்

இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் பேசியதாவது:-

“எங்கள் ஊருக்கும் மேல் இருக்கும் மலைப்பகுதியில் ரோடு இல்லாமல் மக்கள் படும் கஷ்டத்தை வைத்து ஒரு படம் பண்ணு என்று தயாரிப்பாளரும் நடிகருமான ஹரிஷ் ஓரி கேட்கையில், அங்கு ஒரு மாதம் தங்கி அவர்கள் படும்பாட்டை பார்த்து படத்தை நான் இயக்கி இருக்கிறேன். ‘வெள்ளகுதிர’ படத்தை பொறுத்தவரையில் இந்த கதைதான் என்னை இயக்குநராக தேர்ந்தெடுத்தது. முன்னோர்கள் பற்றிய கதையாக இதை எடுத்து இருக்கிறேன். உங்கள் ஆசியோடு இந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”

இயக்குநர் அஜயன் பாலா பேசுகையில், “எந்த ஒரு நட்சத்திர முகமும் இல்லாத இப்படத்தை வெளியில் கொண்டு வர முனையும் ட்ரீம் வாரியர்ஸ் குகன் அவர்களுக்கு நன்றி. தமிழ் பண்பாட்டை கொண்டு வந்திருக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேசியதாவது:-

“ ‘வெள்ள குதிர’ படத்தில் இருக்கும் புது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். வெள்ள குதிர படத்தை பொருத்தவரையில் அது பெற்றிருக்கும் விருதுகள் அனைத்து தேசத்திலும் ஒருமித்த கருத்தை காண்பிக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் தனக்கு என்ன வேண்டுமோ அதை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதை நான் நம்புகிறவன். அந்த மாதிரியான ஒரு நல்ல திரைப்படம் தான் வெள்ளகுதிர. வணிகத்தை தாண்டி ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசிதாவது:-

“ ‘வெள்ள குதிர’ படத்தின் நாயகன் ஹரிஷ் ஓரியை பார்க்கையில் நடிப்பதற்காகவே ஊரைவிட்டு வந்து 13 வருடமாக கூத்துப்பட்டறை கலைஞனாக நடித்து அனுபவம் பெற்று, சிரமப்பட்டு இன்று இந்த வெள்ளகுதிர மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவரைப் பற்றி அவருடைய நண்பர் நடிகர் விதார்த் அழகாக பேசி இருந்தார். நடைபாதை இல்லாத மலை உச்சியில் 13 கிலோமீட்டர், 5 முறை மலை ஏரி படப்பிடிப்பு நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை.

அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து 48 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கும் படம் வெற்றி அடையவும் வாழ்த்துகள் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பேச்சில் படத்தின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது. ஓரிக்கும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஜெயன் பேசுகையில்.. “நேற்று மட்டுமே 12 திரைப்படங்கள் வெளியாகி இருக்கு. இப்படி சினிமாவை நாம் ஒரு கலையாக பார்க்காமல் வியாபாரமாக பார்த்து ரிலீஸ் பண்ணும்போது நல்ல திரைப்படங்களும் காணாமல் போகிறது. எந்த ஒரு கிராஃப்ட்டும் இல்லாமலேயே படம் எடுக்கும் நிலையும் தற்போது வந்துள்ளது. குறைந்த அளவில் படங்கள் வருமேயானால் அதன் தரமும் நமக்கு தெரிய வரும். நல்ல திரைப்படங்களாக ஒரு நான்கு திரைப்படங்கள் வாரத்திற்கு வந்தது என்றால் அதை மக்களிடம் ஈசியாக கொண்டு சேர்க்க முடியும். அந்த வகையில் ‘வெள்ளகுதிர’ திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்திருக்கு” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “கதைக்கு சரியான நாயகனாக தெரிகிறார் நடிகர் ஹரிஷ் ஓரி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் ஒரு சிறந்த இயக்குநர். படம் வெளியாகித்தான் அவர் சிறந்த இயக்குநர் என்று தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளதால் அவர் ஒரு சிறந்த இயக்குநராக தெரிகிறார். இப்பொழுதெல்லாம் சில இயக்குநர்கள் தனது குருநாதர் யாரென்றே சொல்வதில்லை. அந்த வகையில் தனது குருநாதர் காக்காமுட்டை மணிகண்டன் என்பதை தெரிவித்து பேச ஆரம்பித்த சரண்ராஜ் செந்தில்குமாரை நான் பாராட்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் ஒரு மலையையும், ஆளையும் பார்த்து கதை எழுதி இருக்கிறாய் பாராட்டுதலுக்குரியது. ஒரு சுகமான சுமையாக இப்படத்தை சுமந்து இருக்கிறாய் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ஒரு திரைப்படம் வெற்றி படம் தோல்வி படம் என்பது வேறு. ஆனால் திரைப்படம் திரைப்படமாகவே இப்பொழுது வருவதில்லை. அது நினைத்தால் எனக்கு இப்பொழுது அவமானமாகவே இருக்கிறது. எங்களது உறுப்பினர்கள் இருந்தால்தான் குறைந்தபட்சமாக ஒரு நல்ல திரைப்படமாவாது உருவாகிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE