சினிமா செய்திகள்

சுந்தர்.சிக்கு டாக்டர் பட்டம் : ‘காபி வித் காதல்’ விழாவில் அறிவிப்பு

 

மூனு ஹீரோக்கள், நான்கு ஹீரோயின்கள் என கலர் ஃபுல் காம்பினேஷனில் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘காபி வித்  காதல்’ இளசுகள் மட்டுமின்றி எல்லா தரப்பு ஆடியன்ஸ் ஏரியாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  படத்தின் நாயகர்கள் ஜீவா, ஜெய், நாயகிகள் மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, டிடி மேடையில் அரட்டை கச்சேரி நடத்தி படப்பிடிப்பு அனுபுவங்களை பகிர்ந்துகொண்டது சுவாரஷ்யமாக இருந்தது.

முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி பேசியதாவது:-

“நீண்ட நாட்களாகவே ஃபீல்குட் படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதும் ஒரு புன்சிரிப்புடன் படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.  ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறிவிட்டது. அதற்கடுத்ததாக  ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தையும் அதேபோல் பீல்குட் படமாக எடுக்கவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் படத்தின் ரூட்டே மாறிவிட்டது. இந்த முறை  ‘காபி வித் காதலில்’  என்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது.

ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளம் என்றால் எனக்கு மட்டும் அது வேலை பார்க்கும் இடம் என்பது போல மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சினை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் யோகிபாபுவுக்கு இதில் ஸ்டைலிஷான கதாபாத்திரம்.  மூன்று கதாநாயகர்களில்  ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்று சொல்ல வேண்டுமென்றால் ஜீவாவை சொல்லலாம்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால் அது சம்யுக்தா தான். இந்த படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதேபோல ரைசாவை பார்க்கும்போது யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா முன் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அம்ரிதாவை பொருத்தவரை நம்மை விட இன்னொரு நடிகைக்கு அதிக காட்சிகள் கொடுக்கிறார்களோ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருப்பது போல எந்நேரமும் ஒரு சந்தேகத்திலேயே இருப்பார். படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதாபாத்திரத்தை மட்டும் எழுதும்போது டிடியை தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை காலில் அடிபட்டு இருந்த நிலையிலும் கூட கஷ்டப்பட்டு நடனமாடினார்” என்றார்.

விஜய் டிவி புகழ் டிடி பேசும்போது, “ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை மிட்டாய் மாமா என்று தான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர் சி சார் எப்படி எல்லாருடைய குறை நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோல தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்த கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று கூறினார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்” என்றார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசும்போது, “இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் அனைத்துமே கதையை நகர்த்தும் விதமாகத்தான் இருக்கும். முக்கியமான ஒரு சூழ்நிலையில் கூட சோகமாக இல்லாமல் எனர்ஜி தரும் விதமாக மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பாடலை உருவாக்கி உள்ளோம். ஆனால் சில நேரங்களில் தாமதமானாலும் கூட சுந்தர் சி முகம் சுளிக்காமல் என்னை வசதியாக பணியாற்ற வைத்தார்” என்று கூறினார்.

இந்த படத்தின் தயாரிப்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசும்போது, “நானும் சுந்தர் சியும்  ‘ரிஷி’ பட சமயத்தில் முதன்முதலாக விமானத்தில்தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.  ‘அரண்மனை-3’ படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக காபி வித் காதல் படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 ஒரு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான். அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE