திரை விமர்சனம்

‘சாருகேசி’ விமர்சனம்!

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் சஞ்சய் (ராஜ் ஐயப்பா), தந்தை மீது அதீத வெறுப்புக் கொண்டிருக்கிறார்.

திடீரென சாருகேசிக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இசை, குடும்பம், தான் யார் என்கிற விவரம் உட்பட அனைத்தையும் மறந்துவிடுகிறார் சாருகேசி. இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் என்ன, மகன் சஞ்சய் தந்தையைப் புரிந்துகொண்டாரா என்பதுதான் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் ‘சாருகேசி’ படத்தின் கதை.

சங்கீத வித்வான் சாருகேசியாக ஒய்.ஜி. மகேந்திரன், தன் அனுபவ நடிப்பால் ஆங்காங்கே மிளிர்ந்தாலும், பெரும்பாலான இடங்களில் ‘நாடகத்தனமான’ நடிப்பை வாசித்துப் போகிறார். சாருகேசியின் மனைவியாக சுஹாசினி மணிரத்னம், மகனாக ராஜ் ஐயப்பா, மருமகளாக ரம்யா பாண்டியன், டிரைவராகத் தலைவாசல் விஜய் ஆகியோர் அவரவர் வாத்தியங்களில் மிகையான பெர்பார்மென்ஸைக் கொடுத்துப் போகிறார்கள்.

இவர்களைத் தாண்டி சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் வெறுமனே வந்து போகிறார்கள். ஓரிரு இடங்களில் நடிகர்களின் நடிப்பு ‘டிக்’ வாங்கினாலும், பல இடங்களில் அது அதீத செயற்கையாகிப் போயிருக்கிறது.
சாருகேசியின் இசை உலகம், அவருக்குள் சிக்குண்டிருக்கும் யோசனைகள் ஆகியவற்றைத் தனது கேமராவில் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் பி.எல். சஞ்சய், அதில் ‘மார்டன் டச்’ கொடுக்கத் தவறியிருக்கிறார். பல நாழிகைக்கு நீண்டவாறு செல்லும் ஒரே ஷாட்கள், சோர்வை நிரப்பும் நீளமான காட்சிகள் என ரிச்சர்டின் படத்தொகுப்பு சோதிக்கவே செய்கிறது.
பாடல்களில், ஷங்கர் மகாதேவன் குரலில் வரும் ‘அவள் தந்த வரம்’ பாடல் சிறப்பு! மற்ற பாடல்கள் திரை நேரத்தை மட்டுமே ஆக்கிரமித்துக் கடந்து போயிருக்கின்றன. மேலும், பழைய அலமாரியிலிருந்து தேடிச் சேர்க்கப்பட்டிருக்கும் பின்னணி இசையும் படத்திற்கு உயிர் கொடுக்கத் தவறியிருக்கிறது.
ஒய்.ஜி. மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகத்தைத் திரைவடிவத்திற்கு மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. சாருகேசியின் உடல்நலப் பிரச்னை, அதன் பிறகு அவரின் மகன் எப்படி அப்பாவைப் புரிந்துகொள்கிறார் என்கிற மையக்கதையோடு இப்படத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். ஆனால், ஒரு நாடகத்தைத் திரைப்படமாக மாற்றும் படலத்தில், திரைமொழிக்குத் தேவையான வாத்தியங்களைச் சேர்த்துக்கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். இதுவே இக்கச்சேரி களைகட்டாமல் போனதற்கு முக்கியக் காரணமாகவும் மாறியிருக்கிறது.
படு செயற்கையான எக்ஸ்பிரஷனோடு நடிகர்கள் பேசும் வசனங்களும் படத்தை இன்னும் கயிறு போட்டுப் பின் வரிசைக்கு இழுத்துக்கொள்கின்றன. புதுமையான காட்சிகளோ, அமைத்திருக்கும் காட்சிகளுக்குத் தேவைப்படும் அழுத்தமான கதையோ இல்லாதது நம்மைச் சோம்பல் முறிக்கவும் வைக்கிறது.

நன்றி : ஆனந்த விகடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE