‘வெஞ்சென்ஸ்’ திரை விமர்சனம்!
அரசியல் களத்தில் நடந்ததை, நடப்பதை, நடக்கப்போவதை கிண்டி கிளறி ஒரு திரைக்கதை அமைத்தால் ‘வெஞ்சென்ஸ்’ ரெடி.
கதை என்ன?
2042ஆம் ஆண்டில் வாழ்வின் இறுதி அத்தியாயத்தில் இருக்கும் ஒரு மூதாட்டி தான் கடந்து வந்த காலத்தை இளைஞன் ஒருவனுக்கு சொல்கிறார். ஃபிளாஷ்பேக் விரிந்தால்.. அந்த மூதாட்டியே இளம் வயது அபர்ணதி.
சிறு வயதில் தன்னை கண்டுகொள்ளாத சமூகத்தின் மீதான கோபத்தில், எல்லா தருணங்களிலும் தான் புகழ் வெளிச்சத்தில் இருக்கவேண்டுமென்ற தீ எரிகிறது அபர்ணதியின் நெஞ்சத்தில். விளைவு, மாநிலத்தின் முதல் மாணவியாக வருகிறார். படிப்படியாக முன்னேறி மாவட்ட ஆட்சியராக வளர்கிறார். மக்களின் பாராட்டை பெறுகிறார். இது போதாது.. இதைவிட பெரிதாக தான் பேசப்படவேண்டும் என்று நினைக்கிறார். விளைவு.. அரசியல்வாதிகளையே எதிர்த்து நின்று லைம்லைட்டில் தன் பெயரை நிறுத்துகிறார். அதனால் தாய் நாட்டில் ஆட்சியை தனது கட்சி பிடிக்கவேண்டுமென்ற அசைமெண்டை அபர்நதிக்கு தருகிறார் பிரதமர். இந்த அசைன்மெண்டில் அபர்ணதி சந்திக்கும் சவால்களே மிச்ச கதை.

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகை தான் என்பதை ஏற்கனவே சில படங்களில் நிருபித்திருக்கும் அபர்ணதியின் நடிப்பு பசிக்கு அன் லிமிட் விருந்து வைக்கும் ஒரு கேரக்டர் கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன? சாதுர்யம், சகுணித்தனம் மிக்க புகழ் போதைக்கு அடிமையாகிப்போன ஒரு அதிகாரியாக அடித்து தூள் கிளப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவூட்டும் காட்சிகளில் அப்பட்டமாய் பொருத்திக்கொண்டு நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறார்.
முதலமைச்சராக இளவரசு, எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன், மத்திய அமைச்சராக ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக காளிவெங்க உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

எம். எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, கார்த்திக் ராஜாவின் இசை இரண்டும் படத்திற்கு பலம்.
அரசியல் களத்தின் சில பக்கங்களை உறிஞ்செடுத்த கதைக்கு சுவாரஷ்ய திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக். ஆனால் ஆங்காங்கே விறுவிறுப்பு குறைந்த தொய்வான கதை நகர்த்தல் போன்ற குறைகளை கவனித்திருந்தால் ‘வெஞ்சென்ஸ்’ சொல்ல வைத்திருக்கும் வெல்டன்.

