திரை விமர்சனம்

‘டிசி’ விமர்சனம்! : காதலும் வன்முறையும் கலந்த அதிரடி பயணம்!

சூழ்நிலை ஒருவரை குற்றவாளியாக்கினால், அந்த வாழ்க்கை அவரை எங்கே கொண்டு போய் நிறுத்தும்? காவல்துறையின் துரத்தல், குற்ற உலகின் மோதல், எதிர்பாராத காதல் என பல்வேறு உணர்வுகளை ஒரே பாதையில் பயணிக்க வைக்கும் படமாக வந்திருக்கிறது ‘டிசி’.

சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதாஸ், சூழ்நிலை காரணமாக சிறைக்குச் செல்கிறார். அந்த சிறைவாசம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. தொடர்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்களால் காவல்துறையின் குறியாகிறார். போலீஸிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில் சந்திராவை சந்திக்கிறார். அந்த நட்பு தேவதாஸின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நேரத்தில், எதிர்பாராத விதமாக சந்திரா போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிறார்.

அங்கிருந்து தப்பியோடும் தேவதாஸின் வாழ்க்கையில் சந்திரா ஏற்படுத்திய தாக்கம் மறையவில்லை. அதே பயணத்தில், தனக்குப் பிடிக்காத ஒரு நரக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் சந்திராவைச் சந்திக்கிறார். அவளது வேதனையைப் புரிந்துகொண்டு, அந்த வாழ்க்கையிலிருந்து அவளை மீட்கிறார். மீட்கப்பட்டவளுக்கு அடுத்து எங்கு செல்வது என்றே தெரியவில்லை. அதனால் தேவதாஸுடன் சேர்ந்து பயணிக்கிறார்.

இந்தப் பயணத்தில், தன்னை சீரழித்த மருத்துவரை சந்திரா கொலை செய்ய, போலீஸின் துரத்தல் இருவரையும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் போலீஸ்–குற்றவாளி கும்பல் மோதலாகவே கதை விரிவடைகிறது. இதற்கிடையே தேவதாஸ்–சந்திரா இடையே மலரும் காதல், வன்முறையால் நிறைந்த இந்தக் கதைக்கு வேறொரு உணர்வை சேர்க்கிறது.

லோகேஷ் கனகராஜ் – தேவதாஸாக மிரட்டல்!

இயக்குநராக பல வெற்றிகளைப் பதிவு செய்த லோகேஷ் கனகராஜ், நாயகனாக அறிமுகமாகியிருப்பது படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்று. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் தேவதாஸ் கதாபாத்திரத்தில் அதிரடியாக களமிறங்குகிறார்.

கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான உடல்மொழி, அளவான நடிப்பு என தேவதாஸ் பாத்திரத்தை இயல்பாகக் கொண்டு செல்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது வேகம் கவனிக்க வைக்கிறது. ‘நடிக்க வந்திருக்கிறார்’ என்பதைவிட, ‘தேவதாஸாகவே இருக்கிறார்’ என்ற உணர்வை சில காட்சிகளில் ஏற்படுத்துகிறார்.

வாமிகா கபி – வார்த்தைகளைவிட உடல்மொழி பேசுகிறது!

நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, சிக்கலான வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் பெண்ணின் வலியையும், பயத்தையும், குழப்பத்தையும் தனது உடல்மொழி மூலமாகவே அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவதாஸுடன் இணைந்த பிறகு அவரது கதாபாத்திரத்தில் ஏற்படும் மாற்றமும் நன்றாகப் பதிவாகியுள்ளது. காதல் காட்சிகளிலும், உணர்ச்சிகரமான தருணங்களிலும் கவனம் ஈர்க்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் சஞ்சனா ஏ.கே., சில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவரது கதாபாத்திரத்தின் முடிவு மனதை கனக்கச் செய்கிறது.

தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்துள்ளனர்.

கேமரா – வன்முறைக்கும் வேகம்!

ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, படத்தின் இருண்ட உலகத்தை காட்சிகளின் மூலமாகவே உணர வைக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட கேமரா கோணங்களும், வேகமான கேமரா நகர்வுகளும் காட்சிகளுக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

படம் முழுவதும் ஒரே மாதிரியான வண்ணத் தொனி பயன்படுத்தப்பட்டிருப்பது, கதையின் மனநிலையோடு பார்வையாளர்களையும் இணைக்கிறது. சாதாரணமான காட்சிகளைக்கூட வித்தியாசமான கோணங்களில் படமாக்கி கவனம் ஈர்க்கிறார்.

அனிருத் – படத்தின் இன்னொரு ஹீரோ!

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை.

அதிரடி காட்சிகளுக்கு மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் அவரது இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை பின்னணி இசை படத்தின் வேகத்தை குறைய விடாமல் பார்த்துக்கொள்கிறது.

குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் காட்சிகளின் தீவிரத்தை இசை மேலும் உயர்த்துகிறது. பல இடங்களில் காட்சிகளைவிட பின்னணி இசையே அதிகமாக நினைவில் நிற்கிறது.

வன்முறைக்கு நடுவே காதல்!

அருண் மாதேஸ்வரனின் படங்களில் இருப்பது போன்ற இரத்தம் தெறிக்கும் வன்முறையும், சதைப்பற்றான ஆக்‌ஷன் காட்சிகளும் இங்கும் இருக்கின்றன. ஆனால், இந்த முறை அந்த வன்முறைக்கு நடுவே காதலைக் கலந்து கொடுத்திருப்பது சற்று வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

படம் முழுவதும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றை வெறுமனே அதிர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் கதையின் பயணத்தோடு இணைத்திருக்கிறார் இயக்குநர்.

தேவதாஸ்–சந்திரா இடையே உருவாகும் காதல், படத்தின் இருண்ட சூழலுக்குள் ஒரு மென்மையான இடைவெளியை உருவாக்குகிறது. அந்தக் காதல் காட்சிகள் வரும்போது இதுவரை பார்த்த வன்முறையை சற்றே மறந்துவிட்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.

அதோடு, அடக்குமுறைக்கு உள்ளாகும் எளியவர்கள் ஒரு கட்டத்தில் திருப்பி அடிக்கும்போது, அது வன்முறையாக இருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் காரணத்தையும் கேள்வியையும் இயக்குநர் முன்வைக்கிறார்.

தீர்ப்பு

‘டிசி’ முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் படம் என்று சொல்லிவிட முடியாது. அதற்குள் காதல், நட்பு, துரோகம், காவல்துறையின் அதிகாரம், குற்ற உலகம் என பல அடுக்குகளைச் சேர்த்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.

சில இடங்களில் வன்முறை தூக்கலாக இருந்தாலும், அதனை இசை, ஒளிப்பதிவு, வேகமான படத்தொகுப்பு ஆகியவற்றுடன் இணைத்து ரசிக்க வைக்கிறார்.

காதலின் மென்மையும், வன்முறையின் தீவிரமும் சேர்ந்த வித்தியாசமான கலவைதான் ‘டிசி’. லோகேஷ் கனகராஜின் அதிரடி அறிமுகத்துக்காகவும், வாமிகா கபியின் நடிப்புக்காகவும், அனிருத்தின் பின்னணி இசைக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE