திரை விமர்சனம்

‘அருள்வான்’ திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் படங்கள் வருவது புதிதல்ல. ஆனால், அந்தக் கருத்தை பிரசங்கமாக இல்லாமல், ஒரு எளிய மனிதக் கதையாகச் சொல்வது அரிது. அந்த வகையில், இயக்குநர் கணேஷ் வினாயகனின் ‘அருள்வான்’ மனதை நெகிழவைக்கும் ஒரு சிறிய, நேர்மையான முயற்சி.

தேனி மலைகளின் மடியில் இருக்கும் பூங்கொடி என்ற பழங்குடியினர் கிராமத்தில் வாழும் சிறுமி கிருத்திகாவுக்கு ஒரு ஆசை மட்டுமே — பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆனால் கல்வி என்பது அந்தக் கிராமத்தில் ஒரு வசதியல்ல; எட்டாக்கனியாக இருக்கும் கனவு. அந்தக் கனவை நோக்கி அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் போராட்டமுமே கதை.

தகராறு’ படத்திற்குப் பிறகு அருள்நிதி – கணேஷ் வினாயகன் கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கிறது. இந்த முறை சண்டை, துரத்தல், மாஸ் வசனங்கள் எதுவுமில்லை. தேனி மலைகளின் நடுவே அமைதியாக ஒரு கதையைச் சொல்லிப் பார்க்கிறார்கள். அந்த அமைதிதான் படத்தின் முதல் வெற்றி.

படத்தின் முதல் பாதி முழுக்க கிருத்திகாவின் உலகத்தையே நமக்குக் காட்டுகிறது. அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் ஏக்கம், பயம், உறுதி ஆகியவற்றின் வழியே கதை நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக அருள்நிதி வருகிறார். வழக்கமான ‘ஹீரோ வந்து பிரச்சினையைத் தீர்க்கிறார்’ என்ற பாதையில் செல்லாமல், ஒரு சிறுமியின் கனவுக்கு துணை நிற்கும் மனிதராக மட்டுமே அவரது கதாபாத்திரம் செயல்படுவது ஆறுதலாக இருக்கிறது.

பேபி கிருத்திகாதான் படத்தின் உயிர். எந்தக் காட்சியிலும் நடிக்கிறாள் என்ற உணர்வைத் தராமல், அந்தக் கிராமத்து குழந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். பல இடங்களில் அவரது கண்களே வசனங்களை விட அதிகமாகப் பேசுகின்றன.

அருள்நிதிக்கு இது ஆர்ப்பாட்டமில்லாத இன்னொரு சிறந்த கதாபாத்திரம்.  அதிகாரி கதாபாத்திரம் என்பதற்காக தேவையில்லாமல் குரல் உயர்த்தவோ, பஞ்ச் வசனம் பேசவோ முயற்சிக்கவில்லை. அதுவே கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மை தருகிறது. வழக்கம்போல் அளவான நடிப்பால் கதைக்குத் தேவையான ஆதரவாக இருக்கிறார். ஆரவ், தன் மகளின் கனவுக்காக போராடும் தந்தையாக மனதில் நிற்கிறார். ரம்யா பாண்டியன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷின் இசை காட்சிகளின் உணர்வுகளை மென்மையாகத் தாங்கிச் செல்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவு தேனி மலைகளின் அழகை வெறும் காட்சியாக அல்லாமல், கதையின் ஒரு பாத்திரமாக மாற்றுகிறது. படத்தொகுப்பும் தேவையற்ற நீளத்தைத் தவிர்த்திருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் நேர்மை. கல்வி பற்றிய கருத்தைச் சொல்லும்போது, நல்லவேளை அது பிரச்சாரமாக மாறிவிடவில்லை. அதே நேரத்தில் சில இடங்களில் கதை எதிர்பார்க்கக்கூடிய பாதையில் பயணிப்பதும், சில காட்சிகள் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

இருப்பினும், குழந்தைகளின் கல்வி உரிமையை உணர்ச்சிகரமாகவும் நம்பகமாகவும் பேசும் படமாக ‘அருள்வான்’ வெற்றி பெறுகிறது. பெரிய திருப்பங்களோ பிரமாண்டங்களோ இல்லாமல், ஒரு சிறுமியின் கனவின் வழியாக மனதைத் தொடும் இந்தப் படம், அரங்கத்தை விட்டு வெளியேறிய பிறகும் நினைவில் நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE