திரை விமர்சனம்

‘பாம்’ திரை விமர்சனம்! : அர்ஜூன்தாஸ் – காளிவெங்கட்டின் நடிப்பு ஆகச்சிறப்பு!

ஆண்டாண்டு காலமாக அண்ணன் தம்பியாய் வாழ்ந்து வந்த ஒரு கிராமம், கிராமத்தினர் சாதியால், கும்பிடும் சாமியால் பிளவுபடுகிறது. அந்த கிராமத்தில் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில் செய்துவரும் அர்ஜூன் தாஸும் அவரது உயிர் நண்பன் காளிவெங்கட்டும் மனிதத்தை மதிக்கும் மனிதர்கள். அதிலும் முற்போக்கு சிந்தனையுள்ள காளிவெங்கட் இரண்டுபட்டு கிடக்கும் கிராமத்தை ஒன்றுசேர்க்க முயற்சிக்கிறார். ஆனால் திடீரென இறந்துபோகிறார். இறந்துபோன காளிவெங்கட்டின் உடம்பில் சாமி இருப்பதாக நம்பவைத்து ஊரை ஒன்று சேர்க்க திட்டமிடுகிறார் அர்ஜூன் தாஸ். அவரது திட்டம்? காளிவெங்கட்டின் கனவு நிறைவேறுகிறதா இல்லையா என்பதே ‘பாம்’ கதை.

படத்தின் கதாநாயகன் அர்ஜுந்தாஸ் என்றால் கதையின் நாயகன் காளிவெங்கட் என்று சொல்லலாம்!

‘கைதி’. ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக ஈர்க்கப்பட்டு தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் கதாநாயகனாக அசத்திவரும் அர்ஜுன் தாஸ், இந்தப்படத்திலும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

வாழ்வின் விநோதங்களை அடிப்படையாக கொண்ட கதையில் மணி முத்து என்ற மாட்டுக்கு லாடம் கட்டும் கேரக்டரில் அர்ஜுன்தாஸின் நடிப்பு, எளிய மனிதர்களை கண்முன் நிறுத்தும் எதார்த்த நடிப்பாக இதயம் தொடுகிறது.

அதிலும் இடைவேளைக்குப் பிறகு சாமி வந்தாடுவது போன்ற ஒரு காட்சி, படம் பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கும் ஆகச்சிறந்த நடிப்பு! காளிவெங்கட்டுக்கும் சமமான இடம் கொடுத்து கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் அர்ஜுன் தாஸின் நல்ல மனதை படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

ஒரு ஹீரோ என்றால் இத்தனை பாட்டு வேண்டும் இத்தனை சண்டை வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து மணி முத்து என்ற கேரக்டர் என்ன கேட்கும்; அது என்ன செய்யும் என்பதை மட்டும் உள்வாங்கி நடித்திருக்கும் அர்ஜுன் தாஸின் பக்குவம், சினிமாவில் அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என விமர்சகர்களின் பாராட்டையும் அர்ஜுன் தாஸ் பெறுகிறார்.

இது அவரது உழைப்பிற்கும் கதாபாத்திர தேர்வுக்கும் கிடைத்த வெற்றி! உண்மையான நட்பைவிட மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் உயர்ந்து நிற்கிறார்.

இவரது நண்பராக, இரண்டுபட்டு கிடக்கும் ஊரை ஒன்றுசேர்த்துவைக்க பாடுபடும் கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்திருக்கும் காளிவெங்கட்டின் நடிப்பில் அத்தனை உயிர்ப்பு.

காளிவெங்கட்டின் தங்கையாக அர்ஜுந்தாஸின் காதலியாக ஷிவாத்மிகா ராஜசேகர் அத்தனை பாந்தம். கிராமத்து இளம்பெண் கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தியிருக்கிறார்.

பிரிந்திருக்கும் ஊரை ஒன்றுசேர விடாமல் சதிசெய்யும் நயவஞ்சக அரசியல்வாதியாக நாசர், சாதிவெறிபிடித்த ஊர்த்தலைவராக சிங்கம்புலி, கலெக்டராக அபிராமி உள்ளிட்ட கதாபாத்திரங்களும் சிறப்பு.

கதைக்கும், களத்திற்கும் பொருத்தமான இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

படத்திற்கு ‘ஜோதி’ என்றுகூட தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதைவிட்டுவிட்டு. இயற்கை உபாதையை தலைப்பாக வைத்தது ஏனோ நெருடல்.

முதல்பாதி படத்தில் நாடகத்தனமும் செயற்கையும் இருந்தாலும் இரண்டாம் பாதி கதையை விறுவிறுப்பாக கொண்டுசென்று குறையை சரிசெய்திருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.

சமத்துவம், சமாதானம், சக மனிதர்களை நேசிப்பவர்களே சாமிக்கு சமம் என்பதுபோன்ற கருத்தை விதைக்கும் ‘பாம்’ போதிக்கும் செய்தி, நெஞ்சை நெகிழச் செய்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE